ஓட்டல் உரிமையாளர் படுகொலை


ஓட்டல் உரிமையாளர் படுகொலை
x
தினத்தந்தி 10 Nov 2021 7:51 PM GMT (Updated: 10 Nov 2021 7:53 PM GMT)

மதுரை புதூர் ஐ.டி.ஐ. எதிரே ஓட்டல் உரிமையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை,
மதுரை புதூர் ஐ.டி.ஐ. எதிரே ஓட்டல் உரிமையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓட்டல் உரிமையாளர்
மதுரை புதூர் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 45). இவர் புதூர் ஐ.டி.ஐ. எதிரே ஓட்டல் வைத்திருக்கும் முத்து என்பவருடன் பங்குதாரராக சேர்ந்து ஓட்டல் தொழில் செய்து வந்தார்.நேற்று மதியம் ஓட்டலில் முத்துக்குமார் மட்டும் இருந்துள்ளார். அவரது பங்குதாரர் முத்து திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஓட்டலுக்கு வந்தார். அப்போது முத்துக்குமார் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அவரது உடலை கைப்பற்றி பார்த்த போது, முத்துக்குமாரின் ஒரு கையை காணவில்லை. பின்னர் அதனை தேடியபோது எதிரே உள்ள ஐ.டி.ஐ. வளாக சுவர் அருகே கையை கண்டுபிடித்தனர். அதை தொடர்ந்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மனைவியுடன் தகராறு
கொலைசெய்யப்பட்ட முத்துக்குமாருக்கு சத்தியசீலா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். குடும்பத்தகராறில் கணவன், மனைவியும் கடந்த சிலஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். முத்துக்குமார் முன்பு திருவாரூரில் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். அங்கு பணத்தை இழந்ததால் குடும்பத்தினருடன் மதுரைக்கு வந்து விட்டார். இந்த நிலையில் தான் முத்துவுடன் சேர்ந்து ஓட்டல் தொழிலை செய்து வந்துள்ளார். அவரை மனைவியுடன் சேர்த்து வைக்க உறவினர்கள், நண்பர்கள் உதவி செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை முத்துக்குமாரும், முத்துவும் சேர்ந்து ஓட்டலில் வைத்து மது அருந்தி உள்ளனர். அதன்பின்னர் முத்து மட்டும் திருமணத்திற்கு சென்று விட்டார். பின்னர் அவர் வந்த போது தான் முத்துக்குமார் கொலைசெய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
பெண்களுடன் தொடர்பு
மேலும் முத்துக்குமாருக்கு சில பெண்களுடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. அதில் ஓட்டலில் வேலை பார்த்த ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட உறவை பணம் கொடுத்து அதனை சரி செய்துள்ளனர். மேலும் ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தகாத உறவு குறித்து தல்லாகுளம் போலீசில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக தான் அவரை விட்டு மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. எனவே அவரால் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினர் அவரை கொலை செய்து இருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
கொலைக்கான காரணம்?
அது தவிர நேற்று அவர் ஓட்டலில் 3 பேருடன் மது அருந்தி உள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். முத்துக்குமார் கொலை செய்யப் பட்டதற்கான காரணம் இது வரை  முழுமையாக தெரியவில்லை. குற்றவாளிகள் சிக்கினால் தான் கொலைக்கான காரணம்? முழுமையாக தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் கையை வெட்டி ஓட்டல் உரிமையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story