காஞ்சீபுரம் மாவட்டத்தில் 170 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 170 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது
x
தினத்தந்தி 12 Nov 2021 10:26 AM GMT (Updated: 12 Nov 2021 10:26 AM GMT)

தொடர் மழை காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 170 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.

வெள்ள அபாய எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழையையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளம், குட்டைகள் விறுவிறுவென நிரம்பி வருகிறது. செவிலிமேடு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் முழுவதும் மூழ்கிய நிலையில் மழை நீர் ஆர்ப்பரித்து சென்று கொண்டிருக்கிறது.

தாழ்வான பகுதிகள் மற்றும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி உத்தரவின் பேரில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு அரசு முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கி பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

170 ஏரிகள்

ஏரிகள் நிறைந்த காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 381 ஏரிகளில் 170 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. 147 ஏரிகள் 70 சதவீதமும், 34 ஏரிகள் 50 சதவீதமும், 29 ஏரிகள் 25 சதவீதமும், ஒரு ஏரி ஒரு சதவீதமும் நிரம்பி உள்ளது.

இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story