13-ம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு


13-ம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 13 Nov 2021 2:24 AM IST (Updated: 13 Nov 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

டி.கல்லுப்பட்டி அருகே 13-ம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

பேரையூர், 
டி.கல்லுப்பட்டி அருகே 13-ம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
தகவல்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அடுத்துள்ள வில்லூர் அருகே போத்தநதி ஊராட்சி மன்ற தலைவர் விநாயகமூர்த்தி  தங்கள் ஊரில் பழமையான கோவில் இருப்பதாக கொடுத்த தகவலின் பேரில் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், தொல்லியல் கள ஆய்வாளருமான முனீஸ்வரன் தலைமையில் ஆனந்தகுமரன், கருப்பசாமி ஆகியோர்  கள ஆய்வு செய்தனர். இதில் கி.பி. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டும், சிதைந்த நிலையில் சிவன் கோவிலும் கண்டறியப்பட்டு உள்ளது.
இது குறித்து தொல்லியல் கள ஆய்வாளர் பேராசிரியர் து.முனீஸ்வரன் கூறியதாவது:-
செங்குடிநாடு பகுதியில் மதவேல நாயக்கனூரின் கட்டுப்பாட்டில் கவுசீக நதிக்கரையின் மேற்கு பகுதியில் போத்தன் என்ற சிற்றரசர் ஆட்சி புரிந்ததாகவும், அவர் பெயரில் போத்தநதி என்ற ஊர் பெயர் வந்ததாகவும், அறியப் படுகிறது. 
இந்த ஊரின் தெற்குப் பகுதியில், போத்தன் ஊருணியின் அருகே பாழடைந்த நிலையில் கருவறை, கோபுரம், முன் மண்டபம் கொண்ட கோவில் கண்டறியப ்பட்டது. கோவிலின் அமைப்பினை ஆய்வு செய்தபோது, செங்கற்கள், சாந்து, சேர்ந்து கட்டிய கோபுரம் முற்றிலும் சிதிலமடைந்து சிற்பங்கள் சிதைந்த நிலையில் இருக்கிறன. கருவறை சதுர வடிவத்தில் கிழக்கு நோக்கியும், உட்பகுதி வடக்கு, தெற்கு திசையில் மாடக்குழிகளும் சிலைகள் இன்றி அமைந்துள்ளன. முன்மண்டபம் முற்றிலும் சிதிலமடைந்ததால் மிஞ்சிய தூண்களில் வாயிற் காவலர்கள் ஆண், பெண் சிற்பங்களாக நின்று வணங்கிய நிலையிலும், பூ மொட்டு போதிகையுடன் தூணின் இரண்டு பக்கமும் செதுக்கப்பட்டு உள்ளது.
கல்வெட்டு
கோவிலின் பாத பந்த அதிட்டானம் குமுத வரி பகுதியில் 3 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட 8 வரி சொற்கள் கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வெட்டில் பல சொற்கள் தேய்மானம் ஏற்பட்டதால் தமிழக தொல்லியல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற சாந்தலிங்கம் உதவியுடன் மை படியெடுத்து ஆய்வு செய்த போது "திருவாய்க்கேழ்விக்கு மேல் ஸ்ரீ கோமாற பன்மரன் திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு மாடக்குழக்கு மதுரை திருவாலவாயுடையார் கோவில் " என்ற வரிகள் செதுக்கப்பட்டுஉள்ளன. இந்த கல்வெட்டு முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சி காலத்தைச் (1216- 1239) சேர்ந்தவையாகும். திருவாலவாயுடையர் என்று அழைக்க கூடிய சிவன் கோவிலுக்கு சந்தியா தீபம் ஏற்றிட நிலம் தானமாக வழங்கப்பட்டு இருக்கலாம். இந்த தமிழ் கல்வெட்டின் காலம் கி.பி.13-ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்றார்.
1 More update

Next Story