ஈரோட்டில் பயங்கரம்: பெண்ணை கொன்று சாக்குமூட்டையில் பிணம் வீச்சு


ஈரோட்டில் பயங்கரம்: பெண்ணை கொன்று சாக்குமூட்டையில் பிணம் வீச்சு
x
தினத்தந்தி 13 Nov 2021 4:54 PM GMT (Updated: 13 Nov 2021 4:54 PM GMT)

ஈரோட்டில் பெண்ணை கொலை செய்து சாக்குமூட்டையில் பிணத்தை கட்டி வீசிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோட்டில் பெண்ணை கொலை செய்து சாக்குமூட்டையில் பிணத்தை கட்டி வீசிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 
சாக்கு மூட்டைக்குள் பெண் உடல்
ஈரோடு அருகே உள்ள ரங்கம்பாளையம் கே.கே.நகர் லட்சுமி கார்டன் குடியிருப்பு பகுதியில் ஒரு காலி இடத்தில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. அந்த சாக்கு மூட்டைக்குள் இருந்து நேற்று மதியம் கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் போரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாக்குமூட்டையை பிரித்து பார்த்தார்கள். அப்போது சாக்கு மூட்டைக்குள் கை, கால்கள் மடங்கிய நிலையில் சுமார் 45 வயது மதிக்கதக்க பெண்ணின் உடல் இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
மேலும் சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தக்குமார் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலையாளிகள் பெண்ணை அடித்து கொலை செய்து பின்னர் சாக்கு மூட்டையில் போட்டு கட்டி வீசிச்சென்றது தெரியவந்தது.
கடந்த 2 நாட்களாக சாக்கு மூட்டை அந்த பகுதியில் கிடந்துள்ளது. குப்பைகளை சாக்கு மூட்டையில் கட்டி வீசிச்சென்றுவிட்டனர் என்று கருதி யாரும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளனர். துர்நாற்றம் வீசிய பின்னரே போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். 
வலைவீச்சு
கொலை செய்யப்பட்ட பெண்ணின் முகம் பிளாஸ்டிக் கவர் மூலம் கட்டப்பட்டிருந்தது. உடலில் பல இடங்களில் தாக்கப்பட்ட காயங்கள் இருந்தன. வேறு இடத்தில் வைத்துகொலை செய்துவிட்டு வாகனத்தின் மூலம் இங்கு கொண்டு வந்து உடலை வீசிச்சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
மேலும் பெண்ணின் உடல் கிடந்த இடத்திற்கு அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?, மர்ம நபர்கள் கொலையான பெண்ணை கற்பழித்து கொன்று உடலை அங்கு கொண்டு வந்து போட்டார்களா? அல்லது கள்ளக்காதல் தகராரா? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, பெண்ணை கொலை செய்து சாக்கு மூட்டைக்குள் கட்டி வீசி சென்ற கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த கொலை சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- - -

Related Tags :
Next Story