கள்ளத்தனமாக 3 அகதிகளை படகில் ஏற்றிச்சென்ற 4 பேர் கைது


கள்ளத்தனமாக 3 அகதிகளை படகில் ஏற்றிச்சென்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 15 Nov 2021 11:48 AM GMT (Updated: 15 Nov 2021 11:48 AM GMT)

பாம்பனில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்க அகதிகள் 3 பேரை ஏற்றிச்சென்ற 4 பேரை கியூபிரிவு போலீசார் கைது செய்தனர்.

ராமேசுவரம், 
பாம்பனில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்க அகதிகள் 3 பேரை ஏற்றிச்சென்ற 4 பேரை கியூபிரிவு போலீசார் கைது செய்தனர்.
ரோந்து
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு கடற்கரை பகுதி யில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் மகேசுவரி தலைமையில் கியூ பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முந்தல்முனை கடற்கரையில் அதிகாலை வந்த ஒரு நாட்டு படகை நிறுத்தி அந்த படகில் வந்த நான்கு மீனவர் களிடம் விசாரணை நடத்தினர். 
விசாரணையில் பாம்பன் அக்காள்மடத்தைச் சேர்ந்த சிபிராஜ் (வயது 51), தேசிங்குராஜன் (46), சீமோன் (29), ஈஷா (29) ஆகிய 4 பேரும் சேர்ந்து கடந்த 14-ந் தேதி அதிகாலை பாம்பன் முந்தல்முனை கடற்கரையில் இருந்து அகதிகள் 3 பேரை படகில் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. 
 தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள 2-வது மணல்திட்டு அருகே படகை நிறுத்திவிட்டு இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகில் வந்தவர்களிடம்  3 அகதி களையும் அந்த படகில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் பாம்பன் முந்தல்முதல் முனை கடற்கரைக்கு வந்தது விசாரணையில் தெரியவந்தது. 
விசாரணை
இதையடுத்து 4 பேர் மீதும் கியூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அகதிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய நாட்டு படகையும் கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். அகதிகளை ஏற்றிச்செல்ல  3 அகதி களிடம்  ரூ.80 ஆயிரம் பணம் பெற்றதாகவும் இந்த 4 பேரும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இலங்கைக்கு கடல் அட்டை, மஞ்சள் மூடைகள் உள்ளிட்ட வேறு ஏதேனும் பொருட்களை இவர்கள் கடத்தி சென்று உள்ளனரா என்பது குறித்தும் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story