அந்தியூர் அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் கைப்பற்றிய கடிதத்தில் பரபரப்பு தகவல்


அந்தியூர் அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் கைப்பற்றிய கடிதத்தில் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 17 Nov 2021 5:20 PM GMT (Updated: 17 Nov 2021 5:20 PM GMT)

அந்தியூர் அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் கைப்பற்றிய கடிதத்தில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அந்தியூர்   அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் கைப்பற்றிய கடிதத்தில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பிளஸ்-1 மாணவி
அந்தியூர் அருகே உள்ள விராலிக்காட்டூர் காலனி பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். அவருடைய மனைவி செலம்பாயி. கணவன், மனைவி இருவரும் ஈரோட்டில் உள்ள மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த தம்பதிக்கு 2 மகள்கள். மூத்தமகள் கீதா (வயது 16)  அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மற்றொரு மகள் பள்ளிபாளையம் உண்டு உறைவிட பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தூக்குப்போட்டு தற்கொலை
கீதா நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பள்ளிக்கூடம் சென்றார். அவரது பெற்றோர் ஈரோட்டில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு வேலைக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் கீதா மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் ஈரோட்டில் உள்ள தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு, அத்தை தேவி தன்னை திட்டியதாகவும், இதனால் தான் மனவேதனை அடைந்ததாகவும் கூறியுள்ளார். பின்னர் கீதா வீட்டின் விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு கொண்டார்.
இதுபற்றிய தெரிய வரவே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக  எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு கீதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அறிந்ததும் கீதாவின் பெற்றோர் அங்கு சென்று மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
கடிதம் சிக்கியது
 இதுபற்றி வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கீதாவின் வீட்டை சோதனையிட்டபோது அவர் எழுதிய ஒரு உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் அவர், ‘எனது சாவுக்கு தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த 3 பேர் தான் காரணம்’ என கூறி இருந்தார். மாணவி எழுதியிருந்த அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து போலீசார் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த 3 பேர், கீதாவின் அத்தை தேவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தனிப்படை
மேலும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின்பேரில் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மேற்பார்வையில் வெள்ளித்திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், மாணவி அந்த கடிதத்தில் பரபரப்பான தகவலை எழுதி இருந்த தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த 3 பேரை பிடிக்க தஞ்சாவூர் விரைந்துள்ளனர். அவர்களை பிடித்தால் தான் கீதா தற்கொலை செய்து கொண்டதற்கான உண்மை காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
அந்தியூர் அருகே பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story