முதல் திருமணத்தை மறைத்து காதல் திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை


முதல் திருமணத்தை மறைத்து காதல் திருமணம் செய்த  பெண் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 18 Nov 2021 8:27 PM GMT (Updated: 18 Nov 2021 8:27 PM GMT)

நம்பியூரில் முதல் திருமணத்தை மறைத்து தொழிலாளியை காதலித்து 2-வதாக திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நம்பியூர்
நம்பியூரில் முதல் திருமணத்தை மறைத்து தொழிலாளியை காதலித்து 2-வதாக திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
சத்தியமங்கலம் வடக்குபேட்டை தண்டுமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் சிவமுனியப்பன் (வயது 21). தொழிலாளி. இவர் தற்போது பெற்றோருடன் நம்பியூர் பெரியார்நகரில் வசித்து வருகிறார்.
சிவமுனியப்பனுக்கும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ராஜகவுண்டன்பாளையத்தை சேர்ந்த சவுமியா (20) என்பவருக்கும் காதல் மலர்ந்தது. அவர்கள் 2 பேரும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
தற்கொலை
கடந்த 12-ந் தேதி சிவமுனியப்பன் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் சோர்வுடன் காணப்பட்ட சவுமியாவிடம் விசாரித்தார். அதற்கு சவுமியா, “எனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. அதை மறைத்து உங்களை திருமணம் செய்து கொண்டேன். இந்த விவரம் தெரியவந்தால் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டீர்களோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொள்ள விஷத்தை குடித்துவிட்டேன்” என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிவமுனியப்பன் தனது மனைவியை காப்பாற்றுவதற்காக அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.  அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சவுமியா இறந்தார்.
இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 9 மாதங்களே ஆகி இருப்பதால், கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவியும் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story