புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 22 Nov 2021 10:53 PM GMT (Updated: 22 Nov 2021 10:53 PM GMT)

புகார் பெட்டி

புதர் மண்டி கிடக்கும் பூங்கா 
ஈரோடு திண்டல் மாருதி நகரில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா புதர் மண்டி கிடக்கிறது. இதனால் பாம்புகள் வசிக்கும் கூடாரமாக பூங்கா மாறி விட்டது. மேலும் இங்கிருந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கும் பாம்புகள் படையெடுக்கின்றன. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இந்த பூங்காவில் உள்ள புதர்களை அகற்றி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்ற வேண்டும். 
இளங்கோ, ஈரோடு.

பாதியில் நிற்கும் பணி
பவானி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு செல்லும் ரோடு பழுதடைந்திருந்தது. இதைத்தொடர்ந்து ரோட்டை சீரமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் பணியை முடிக்காமல் பாதியில் விட்டுவிட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே பாதியில் நிற்கும் தார்சாலை பணியை மீண்டும் தொடர வேண்டும்.
பி.கே.மோகன் குமார், பவானி

தேங்கி நிற்கும் சாக்கடை நீர்
ஈரோடு ஆர்.என்.புதூர் பகுதிக்கு உள்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் சாக்கடை வடிகால் அமைக்கப்பட்டது. ஆனால் சாக்கடை வடிகால் முழுமையாக அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு, மலேரியா, காலரா போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை வடிகாலை முழுமையாக அமைக்க வேண்டும். . 
ஊர்பொதுமக்கள், ஈரோடு

குடிநீர் குழாய்களில் உடைப்பு
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 57-வது வார்டு பகுதியில் ஓம்காளியம்மன் கோவில் அருகில் காவிரி ரோடு, கற்பகம் லேஅவுட் முதலாவது வீதி,  கோட்டையார் வீதி, மோசிக்கீரனார் வீதியில் பதிக்கப்பட்டுள்ள ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைப்பை விரைந்து சரிசெய்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்
அன்புத்தம்பி, ஈரோடு.

குவிந்து கிடக்கும் குப்பை 
அந்தியூர் வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறுகிறது. இங்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் என ஏராளமான கடைகள் உள்ளே அமைக்கப்பட்டு வியாபாரம் நடக்கிறது. 30 கிராம மக்கள் வந்து பொருட்களை வாங்கிச்செல்கிறார்கள். சந்தை முடிந்த பின்னர் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை. எனவே அந்தியூர் வாரச்சந்தையை சுத்தப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்யவேண்டும். 
அருள்மணி, அந்தியூர்.

குண்டும்-குழியுமான ரோடு
கோபியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் குள்ளம்பாளையம் பிரிவில் சாலை குண்டும்-குழியுமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுகிறார்கள். அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குள்ளம்பாளையம் பிரிவில் சாலையை சரிசெய்வார்களா?
விநாயகன், கோபி. 

பரமத்திவேலூருக்கு பஸ் வசதி
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் இருந்து கொடுமுடி, ஊஞ்சலூர், ஈரோட்டுக்கு வேைல காரணமாக ஏராளமானோர் சென்று வருகிறார்கள். ஆனால் ஈரோட்டில் இருந்து பரமத்திவேலூருக்கு அரசு பஸ்வசதி இல்லை. தனியார் பஸ்கள் மட்டுமே சென்று வருகின்றன. இதனால் பயணிகள் கொடுமுடி வரை ஒரு பஸ்சிலும், அதன்பின்னர் பரமத்தி வேலூருக்கு ஒரு பஸ்சிலும் ஏறி பரமத்திவேலூருக்கு சென்று வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈரோட்டில் இருந்து பரமத்தி வேலூருக்கு நேரடியாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.
அண்ணாமலையான். பரமத்தி வேலூர். 
பாராட்டு
ஈரோடு வில்லரசம்பட்டியில் இருந்து திண்டல் செல்லும் சாலை குண்டும்-குழியுமாக இருந்தது. இதனால் இருவக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கனார்கள். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குண்டும், குழியுமான ரோட்டை சீரமைத்துள்ளார்கள். எனவே செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம். 
வெங்கடேஷ், ஈரோடு. 



Next Story