பெரியசடையம்பாளையத்தில் தரமற்ற கட்டுமானத்தால் குடிநீர் தொட்டியில் வெடிப்பு- மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு


பெரியசடையம்பாளையத்தில் தரமற்ற கட்டுமானத்தால் குடிநீர் தொட்டியில் வெடிப்பு- மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு
x
தினத்தந்தி 22 Nov 2021 10:53 PM GMT (Updated: 22 Nov 2021 10:53 PM GMT)

பெரியசடையம்பாளையத்தில் தரமற்ற கட்டுமானத்தால் குடிநீர் தொட்டியில் வெடிப்பு ஏற்பட்டு உள்ளதாக மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுத்தனர்.

ஈரோடு
பெரியசடையம்பாளையத்தில் தரமற்ற கட்டுமானத்தால் குடிநீர் தொட்டியில் வெடிப்பு ஏற்பட்டு உள்ளதாக மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுத்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஈரோடு தாலுகா செயலாளர் பாலசுப்பிரமணி தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கொடுத்திருந்த புகார் மனுவில் கூறி இருந்ததாவது:-
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரியசடையம்பாளையத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி 16 மீட்டர் உயரத்தில், 7 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவுடன், ரூ.48 லட்சம் செலவில் கட்டப்பட்டு உள்ளது. நீர்த்தேக்க தொட்டி கட்டும் போதே தூண்களில் வெடிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கட்டுமான பணிகள் முடிந்து குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது தொட்டியில் வெடிப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. தரமற்ற கட்டுமானம் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
குடிநீர் வழக்கும் திட்டம்
ஈரோடு வடக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி இளைஞர் அணி பொதுச்செயலாளர் சசிதயாள் மற்றும் நிர்வாகிகள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
மத்திய அரசின் அனைத்து வீடுகளுக்கும் இலவச குடிநீர் வழங்கும் திட்டம் தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த திட்டத்தை அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் அரசு விதிகளின்படி சரிவர செயல்படுத்துவதில்லை. இந்த திட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி மக்களின் பங்களிப்பாக ரூ.500-ம், ஓ.பி.சி. மக்களின் பங்களிப்பாக ரூ.1000-ம் பஞ்சாயத்தில் குடிநீர் இணைப்புக்காக கட்ட வேண்டும். இந்த தொகையை கட்டுவதற்கு சிரமப்படுபவர்கள் 3 தவணைகளாக கட்டலாம்.
ஆனால் தற்போது சில பஞ்சாயத்துகளில் பொதுமக்களிடம் ரூ.2 ஆயிரத்து 750 வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் போடப்படும் இரும்பு குடிநீர் குழாய் முறையான பாதுகாப்பு வசதியின்றி பல கிராமங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக போடப்பட்டு உள்ளது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
வல்வில்ஓரி
புதிய திராவிடர் கழகம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் மு.கருணாநிதியால் வல்வில்ஓரி சிலை அமைத்து திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் ஆடி மாதம் அரசு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. வல்வில் ஓரி வேட்டுவக்கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர் என்று புறநானூறில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் வல்வில் ஓரி குறித்து தவறான வரலாற்று பதிவு செய்து ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது. இந்த புத்தகம் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டு கடந்த ஆட்சி காலத்தில் பரிசு தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story