பங்களாப்புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மலைப்பாம்பு- வனத்துறையினர் மீட்டனர்

பங்களாப்புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டார்கள்.
டி.என்.பாளையம்
பங்களாப்புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டார்கள்.
வித்தியாசமான சத்தம்
கோபியை சேர்ந்தவர் கண்ணப்பன். இவர் பங்களாப்புதூர் அருகே உள்ள எருமை குட்டை பகுதியில் தன்னுடைய நிலத்தில் தேக்கு மரங்களை நட்டு வளர்த்து வருகிறார். மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக 20 அடி ஆழமுள்ள ஒரு தண்ணீர் தொட்டியும் கட்டியுள்ளார்.
வழக்கம்போல் கண்ணப்பன் நேற்று தேக்கு மரங்களை பார்வையிட சென்றார். அப்போது தண்ணீர் தொட்டியில் இருந்து ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்டது. அதனால் அருகே சென்று தொட்டியை எட்டிப்பார்த்தார்.
மலைப்பாம்பு
அப்போது தண்ணீர் தொட்டிக்குள் மலைப்பாம்பு ஒன்று தத்தளிப்பது தெரிந்தது. உடனே அவர் இதுகுறித்து டி,என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள். பின்னர் தண்ணீர் தொட்டியில் தத்தளித்த மலைப்பாம்பை லாவகமாக மீட்டு ஒரு சாக்குப்பையில் போட்டார்கள். மீட்கப்பட்ட மலைப்பாம்பு சுமார் 3½ அடி நீளம் இருந்தது.
அதன்பிறகு அதை நவக்கிணறு மாதையன் கோவில் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்கள்.
Related Tags :
Next Story






