2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை


2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 23 Nov 2021 9:16 PM IST (Updated: 23 Nov 2021 9:16 PM IST)
t-max-icont-min-icon

2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை


கோவை

99 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த நாட்டு கோழி பண்ணை உரிமையாளர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நாட்டு கோழி பண்ணை

ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூரை சேர்ந்தவர்கள் கார்த்திகா (வயது 36), பிரபு (30). இவர்கள் அந்த பகுதியில் ஹெல்த்தி பவுல்ட்ரி என்ற பெயரில் கடந்த 2011-ம் ஆண்டு நாட்டு கோழி பண் ணை அமைத்தனர். அதில் முதலீடு செய்ய 2 விதமான கவர்ச்சி திட்டங்கள் அறிவித்தனர். 

முதல் திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் செட் அமைத்து கொடுப்பதோடு, 500 நாட்டு கோழி குஞ்சுகள், தீவனங்கள், மருந்துகள் வழங்கப்படும். மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக ரூ.8,500-ம், ஆண்டு ஊக்க தொகையாக ரூ.8,500-ம் வழங்கப்படும் என்று அறிவித்தனர். 

மற்றொரு திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் செட் அமைத்து கொடுப்பதுடன் 300 நாட்டு கோழி குஞ்சுகள், அதற்கு தேவையான தீவனங்கள், மருந்துகள் வழங்கப்படும். பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.8,500-ம், ஆண்டு ஊக்கத்தொகையாக ரூ.12 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.

அபராதம்

அதை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்தனர். ஆனால் அறிவித்த படி அவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. 

மேலும் முதலீட்டு தொகையும் திரும்ப கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் கடந்த 2012-ம் ஆண்டு ஈரோடு மாவட்ட பொருளா தார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். 

அதன் பேரில் இன்ஸ் பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


இதில் அவர்கள், 99 பேரிடம் ரூ.1 கோடியே 55 லட்சத்து 50 ஆயிரம் ஏமாற்றியது தெரியவந்தது. 

இது தொடர்பாக கார்த்திகா, பிரபு, மணிகண்டன், முருகன், சதீஷ் என்ற சதீஷ்குமார், ராமசாமி, ஜெய சாமுண்டீஸ்வரி, ராஜேந்திரன் ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இது தொடர்பான வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு கோர்ட்டில் (டான்பிட்) நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, நாட்டு கோழி பண்ணை அமைத்து தருவதாக கூறி 99 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த கார்த்திகா, பிரபு ஆகிய 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், 

இருவருக்கும் சேர்த்து ரூ.1 கோடியே 65 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். 

இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 6 பேர் மீதும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத தால் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story