புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 23 Nov 2021 8:38 PM GMT (Updated: 23 Nov 2021 8:38 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சுற்றுச்சுவர் வேண்டும் 

விருதுநகர் மாவட்டம் நெ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இதுநாள் வரையிலும் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. இதனால் பள்ளி கட்டிடத்திற்குள் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் புகுந்து மது குடிப்பது, சூதாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மாணவ, மாணவிகளின் நலன்கருதி இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். 
பொதுமக்கள், நெ.மேட்டு்ப்பட்டி. 

மேற்கூரை அமைப்பார்களா? 

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட சொக்கம்பட்டி அருகே சுடுகாடு உள்ளது. இதை அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சுடுகாட்டு கொட்டகையின் மேற்கூரை உடைந்து விட்டது. மழை பெய்தால் தண்ணீர் கசிகிறது. இதனால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்குகள் செய்ய முடியவில்லை. எனவே, உடனடியாக சுடுகாட்டின் மேற்கூரையை மாற்றித்தர வேண்டும். 
கரிகாலன், மேலூர். 

சாக்கடை கால்வாய் தேவை 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள கிருஷ்ணாபுரம், கருக்கவேல் ஐய்யனார் கோவில்தெருவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதன் காரணமாக கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே வீடுகளின் முன்பும், சாலைகளிலும் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
பொதுமக்கள், ராஜபாளையம். 

எரியாத தெருவிளக்குகள் 

மதுரை தபால் தந்தி நகரிலுள்ள கார்த்திக் நகர் இரண்டாவது தெருவில் உள்ள தெரு விளக்குகள் எரியவில்லை. இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் சிறுவர், சிறுமிகளும், பெண்களும் வெளியில் செல்ல அச்சம் அடைகின்றனர். மேலும் சமூக விரோதிகள் திருட்டு, வழப்பறி போன்று குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே, எரியாத தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும். 
சில்வியா, மதுரை. 

சேறும், சகதியுமான சாலை 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மலையரசன் கோவில் ரோடு பகுதியில் சாலை வசதி இல்லை. மண் சாலையாக உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழைக்காலத்தில் சாலை சேறும், சகதியுமாக மாறி விடுவதால் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
முத்துக்குமார், அருப்புக்கோட்ைட. 

நாய்கள் தொல்லை 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்கள் கூட்டம், கூட்டமாக சாலையில் சுற்றி திரிவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உள்ளனர். மேலும், சாலையின் குறுக்கே நாய்கள் படுத்து கிடப்பதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, தொல்லை தரும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். 
கணேஷ், காரைக்குடி. 

குண்டும், குழியுமான சாலை 

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் உள்ள பல சாலைகள் ஆங்காங்கே பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வாகனங்களும் பழுதாகி விடுகிறது. அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. மழைக்காலத்தில் சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இப்பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைப்பார்களா? 
ராஜா, தொண்டி.

Next Story