பெண்ணை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த கணவருக்கு அரிவாள் வெட்டு


பெண்ணை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த கணவருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 23 Nov 2021 8:54 PM GMT (Updated: 23 Nov 2021 8:54 PM GMT)

மதுரையில் பெண்ணை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த கணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகமலைபுதுக்கோட்டை,

மதுரையில் பெண்ணை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த கணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண் கொலை வழக்கு

மதுரை அவனியாபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் சோலைமலை மகன் ஜோதிமணி (வயது 28). இவர் சோழவந்தான் அருகே ராயபுரத்தை சேர்ந்த கிளாடிஸ்ராணி (21) என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தார். 
இந்நிலையில் கடந்த ஜூலை 7-ந்தேதி அவனியாபுரம் கண்மாய் பகுதியில் கொலை செய்யப்பட்டு எரிந்த நிலையில் கிளாடிஸ்ராணி உடலை மீட்ட அவனியாபுரம் போலீசார் கொலை வழக்கில் ஜோதிமணியை கைது செய்தனர். சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ஜோதிமணி தினமும் சோழவந்தான் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார்.

அரிவாள் வெட்டு

இந்த நிலையில் அவர் நேற்று காலை கையெழுத்து போட்டு விட்டு நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். நாகமலைபுதுக்கோட்டையை அடுத்த புதுக்குளம் பிரிவு அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளை வழிமறித்த 2 பேர் ஜோதிமணியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

Next Story