புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 23 Nov 2021 9:39 PM GMT (Updated: 23 Nov 2021 9:39 PM GMT)

புகார் பெட்டி

தேங்கி கிடக்கும் குப்பை 
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள குப்பைகள் நல்லூர் ஊராட்சி பகுதியில் கொட்டப்படுகிறது. அதனால் அங்கு குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கின்றன. குப்பை கொட்டப்படும் இடம் ஊராட்சிக்கு உள்பட்டது என்பதால் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி நிர்வாகம் குப்பையை சேகரித்து செல்வதில்லை இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதற்கு புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
நாதன், புஞ்சைபுளியம்பட்டி.

நோய் பரப்பும் கொசுக்கள்
ேகாபி குள்ளம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தொலைபேசி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாக்கடைகளில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதில்  கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை கடிக்கிறது. இதனால் பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள் தேங்கி கிடக்கும் கழிவுநீரை வெளியேற்ற ஆவன செய்ய வேண்டும்.
பொதுமக்கள், குள்ளம்பாளையம். 

மின்விளக்குகள் ஒளிரவில்லை
கொடுமுடி அருகே உள்ள கொளத்துப்பாளையம்புதூரில் 12-வது வார்டில் நாடார் தெருவில் 2 தெருக்கள் இணையும் இடத்தில் நீண்ட காலமாக மின்விளக்குகள் ஒளிரவில்லை. இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இரவு தொடங்கிவிட்டாலே பெண்கள் தெருவில் நடமாட அச்சப்படுகிறார்கள். இனியாவது அதிகாரிகள் கொளத்துப்பாளையம்புதூர் நாடார் தெருவில் மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், கொளத்துப்பாளையம்புதூர்.

காரைகள் பெயர்ந்த பாலம் 
ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து முத்தம்பாளையம் செல்லும் வழியில் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் காரைகள் உடைந்து கிடக்கிறது. இந்த பாலத்தில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும். எனவே பொது நலன் கருதி ஆபத்தான இந்த பாலத்தை சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் சீரமைத்து தரவேண்டும். 
இ.அருள்மணி, கருங்கல்பாளையம் ஈரோடு.

கோவில் அருகே குப்பை
 லக்காபுரம் ஊராட்சியில் சக்தி விநாயகர் கோவில் அருகில் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் கோவில் அருகே துர்நாற்றம் வீசுகிறது. இந்த பகுதியில் சாக்கடை வடிகாலும் இல்லை. இதனால் மழை பெய்யும்போது கழிவுநீரும், குப்ைபயும் சேர்ந்து தேங்கி நின்று சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் கோவில் அருகே குப்பை கொட்டுவதை தடுத்து, அந்த பகுதியில் சாக்கடை வடிகால் வசதி அமைத்து தரவேண்டும். 
பொதுமக்கள், லக்காபுரம். 

தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?
ஈரோடு சென்னிமலை ரோட்டையும், சாஸ்திரி நகரையும் இணைக்கும் வகையில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தில் சாஸ்திரிநகரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் ரெயில் நிலையம் நோக்கி செல்ல வேண்டும் என்றால் அங்குள்ள சிறிய ரவுண்டானாவை சுற்றி திரும்ப வேண்டும். ஆனால் மேம்பாலத்தைவிட்டு இறங்கியதும் சென்னிமலைரோட்டை நோக்கி வாகன ஓட்டிகள் திரும்புவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மேம்பாலம் இறங்கும் பகுதியில் இருந்து ரவுண்டானா வரை உள்ள பகுதியில் வாகன ஓட்டிகள் திரும்பாமல் இருக்க தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
திவ்யா, சாஸ்திரிநகர்.

மதுப்பிரியர்கள் அட்டகாசம் 
பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தாமரைக்கரை குளத்தின் கரையில் மதுப்பிரியர்கள் அமர்ந்து மது குடித்துவிட்டு மதுபாட்டில்கள் மற்றும் டம்ளர்களை அங்கேயே போட்டு அட்டகாசம் செய்கிறார்கள். இதனால் குளக்கரையில் மதுபாட்டில்கள் மலைபோல் சேர்ந்துவிட்டது. அந்த பகுதியில் யானை, மான் உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி நடமாடும். அவைகளுக்கு பாதிப்பு ஏற்படாதிருக்க குளக்கரையில் உள்ள மதுபாட்டில்களை அதிகாரிகள் அகற்றவும், அங்கு அமர்ந்து மது குடிப்பவர்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சந்திரன், தாமரைக்கரை, பர்கூர்.
உடைந்த சாக்கடை
ஈரோடு வீரப்பன்சத்திரம் பெரியகுட்டை வீதியில் சாக்கடை கால்வாய் கடந்த சில மாதங்களாக உடைந்து கிடக்கிறது. இதனால் 4 சக்கர வாகனங்கள் செல்லமுடியவில்லை. மேலும் மழை காலமாக இருப்பதால் கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. கடும் துர்நாற்றமும் வீசுகிறது. அருகே உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இந்த வழியாகத்தான் மாணவிகள் சென்று வருகிறார்கள். எனவே பெரியகுட்டை வீதியில் உடைந்த சாக்கடையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், வீரப்பன்சத்திரம், ஈரோடு.




Next Story