பள்ளிகளில் நேரடி வகுப்புக்கு தடை கோரிய வழக்கு முடித்து வைப்பு


பள்ளிகளில் நேரடி வகுப்புக்கு தடை கோரிய வழக்கு முடித்து வைப்பு
x
தினத்தந்தி 24 Nov 2021 8:22 PM GMT (Updated: 24 Nov 2021 8:22 PM GMT)

பள்ளிகளில் நேரடி வகுப்புக்கு தடை கோரிய வழக்கு முடித்து வைப்பு

மதுரை
நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாபுதீன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நேரடியாக வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. அதே நேரத்தில் கொரோனா நோய் தொற்றின் 3-வது அலை அதிக அளவில் குழந்தைகளை பாதிக்கும் என கூறப்படுகிறது. சில பள்ளிகளில் மாணவர்களை கண்டிப்பாக நேரடி வகுப்பிற்கு வரவேண்டும் என கூறுகின்றனர். மேலும் சில பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக பின்பற்றுவது இல்லை. சில பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் சரியாக மாணவர்கள் கற்பித்தல் இல்லை என்று கருதி நேரடி வகுப்பிற்கு அனுப்புகின்றனர். இதன் மூலம் பள்ளிகளில் மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு எந்த பிரச்சினையுமின்றி இயங்கி வருகின்றன என தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த சூழலில் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Next Story