ஈரோடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரைய பத்திரம்- 3 நாள் முகாமில் வழங்கப்படுகிறது


ஈரோடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரைய பத்திரம்- 3 நாள் முகாமில் வழங்கப்படுகிறது
x
தினத்தந்தி 24 Nov 2021 10:05 PM GMT (Updated: 24 Nov 2021 10:05 PM GMT)

ஈரோடு வீட்டு வசதி வாரியத்துக்கு உள்பட்ட வீட்டுமனை திட்டங்களில் ஒதுக்கீடு பெற்று வீடுகள் மற்றும் மனைகளுக்கு உரிய தொகை செலுத்தியவர்களுக்கு 3 நாட்கள் முகாம் நடத்தப்பட்டு பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.

ஈரோடு
ஈரோடு வீட்டு வசதி வாரியத்துக்கு உள்பட்ட வீட்டுமனை திட்டங்களில் ஒதுக்கீடு பெற்று வீடுகள் மற்றும் மனைகளுக்கு உரிய தொகை செலுத்தியவர்களுக்கு 3 நாட்கள் முகாம் நடத்தப்பட்டு பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. 
வீட்டுமனை ஒதுக்கீடு
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஈரோடு வீட்டு வசதி பிரிவு சார்பில் ஈரோடு முத்தம்பாளையம், நசியனூர் ரோடு மற்றும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இங்கு உள்ள வீடுகள், வீட்டு மனைகள் குலுக்கல் முறையிலும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ஒதுக்கீடு பெற்றவர்கள் தவணை முறை அல்லது மொத்தமாக தொகை செலுத்தி வருகிறார்கள். தொகை செலுத்தியவர்கள் பத்திரங்கள் பெற்று வருகிறார்கள்.
முகாம்
வீட்டு மனை மற்றும் வீடுகள் ஒதுக்கீடு பெற்று முழுமையாக பணம் செலுத்தியவர்கள் பத்திரங்கள் வாங்க கால தாமதம் ஆவதை தவிர்க்க தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரது ஆலோசனையின் பேரில் வீட்டு வசதி வாரிய திட்ட மனை மற்றும் வீடுகளுக்கு ஒதுக்கீடு பெற்றவர்கள் பத்திரம் வாங்கவும், அவர்கள் வாரிய நடைமுறைகளை முறையாக மேற்கொள்ளவும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி ஈரோட்டில் ஏற்கனவே 2 முறை முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதன்மூலம் ஏராளமானவர்கள் பயன் அடைந்து உள்ளனர். இந்தநிலையில் நவம்பர் மாதத்துக்கான முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.
3 நாட்கள் முகாம்
இதுபற்றி ஈரோடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி கரிகாலன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழிகாட்டுதலின் பேரில் முகாம் நடைபெறுகிறது. வீடுகள் மற்றும் வீட்டு மனைகளுக்கு முழு தொகையையும் செலுத்தி இதுவரை பத்திரங்கள் பெறாமல் நிலுவையில் உள்ளவர்களுக்கு கிரைய பத்திரங்கள் வழங்கும் முகாம், பத்திரம் வழங்கும் விழா என்ற பெயரில் ஈரோடு சம்பத்நகரில் உள்ள ஈரோடு வீட்டு வசதி வாரிய அலுவலக வளாகத்தில் 26-ந் தேதி (நாளை), 29-ந் தேதி (திங்கட்கிழமை), 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. இந்த முகாமில் வீடு, வீட்டு மனைகள் ஒதுக்கீடு பெற்று முழு தொகை செலுத்தியவர்களுக்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து கிரைய பத்திரங்கள் பெற்றுக்கொள்ளலாம். ஒதுக்கீடுதாரர்கள் இந்த முகாமை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு ஈரோடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் கரிகாலன் கூறி உள்ளார்.

Next Story