புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Nov 2021 10:05 PM GMT (Updated: 24 Nov 2021 10:05 PM GMT)

புகார் பெட்டி

ரோட்டில் குப்பை
ஈரோடு பெரியசேமூர் எல்.வி.ஆர்.காலனி செல்லும் வழியில் ரோட்டில் பலர் குப்பைகளை கொட்டி விடுகிறார்கள். அங்கு குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. மேலும் காற்றில் குப்பைகள் பறந்து நடந்து செல்வோர் மீது படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனே குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பெரியசேமூர், ஈரோடு.

புதர்மண்டிய சுடுகாடு 
கவுந்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்பாளையத்தில் மயானம் உள்ளது. அந்த பகுதியில் இறப்பவர்களின் உடல்களை இங்குதான் கொண்டுவந்து எரியூட்டுவார்கள். தற்போது பல மாதங்களாக பயன்படுத்த முடியாத அளவுக்கு சுடுகாட்டில் செடி கொடிகள் வளர்ந்து விட்டன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுடுகாட்டை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஊர்ப்பொதுமக்கள், அய்யம்பாளையம்.

ஒளிராத தெருவிளக்கு
 ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட (57-வது வார்டு) பூர்ணா கார்டன், கருங்கல்பாளையம் பெரியமாரியம்மன் கோவில் வீதியில் கடந்த 3 மாதங்களாக தெருவிளக்கு ஒளிரவில்லை. இதனால் இரவு நேரங்களில் மதுபிரியர்கள் தெருவில் பல இடங்களில் மது அருந்துகிறார்கள். இதனால் பெண்கள் நடமாடவே அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் ஒளிராத மின்விளக்குகளை ஒளிரச்செய்வார்களா?
அன்புதம்பி, ஈரோடு.

பள்ளியில் ஆபத்தான கிணறு
பெருந்துறை அருகே உள்ள பெரியவீரசங்கிலியில் அரசு நடுநிலைப்பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் வளாகத்தில் திறந்தவெளியில் ஆபத்தான கிணறு உள்ளது. மாணவ-மாணவிகள் கிணற்றின் அருகிலேயே சென்று விளையாடுகிறார்கள். எனவே பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பு கருதி கிணற்றை சுற்றிலும் தடுப்பு சுவர் எழுப்பி, கம்பியால் மூடி போட வேண்டும். 
சின்னத்துரை என்கிற குமாரசாமி, பெரியவீரசங்கிலி.

தொங்கும் மின்கம்பிகள்
கோபி தாசப்பகவுண்டன்புதூர் மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட புள்ளப்பநாய்க்கன் பாளையம் ஊராட்சி ஏழூர் கிராமத்தில் சத்தி-அத்தாணி நெடுஞ்சாலையின் குறுக்கே மின்சார ஒயர்கள் தொங்குகின்றன. இதனால் பாரம் ஏற்றிவரும் லாரிகள் இதில் உரசி தீப்பொறி பறக்கிறது. பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்குள் மின்வாரிய அதிகாரிகள் இதை சரிசெய்ய வேண்டும்.
பொதுமக்கள், ஏழூர்.

தேங்கிநிற்கும் கழிவுநீர்
 அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் ஊராட்சியில் புதிதாக சாக்கடை கட்டப்பட்டது. ஆனால் அதில் கழிவுநீர் செல்ல முடியாமல் கடந்த 2 மாதங்களாக தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?
சக்கரவர்த்தி, குருவரெட்டியூர்.

நிழற்குடை அமைக்கப்படுமா?
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள நிழற்குடைகள் அகற்றப்பட்டன. பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு மீண்டும் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் ரவுண்டானா பகுதியிலும், சவிதா சிக்னல் பகுதியிலும் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். வெயில் அடிக்கும்போது நிழலுக்கு ஒதுங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தாமோதரன், ஈரோடு.





Next Story