தோப்புகளில் தென்னை மட்டைகள் தேக்கம்


தோப்புகளில் தென்னை மட்டைகள் தேக்கம்
x
தினத்தந்தி 25 Nov 2021 2:10 PM GMT (Updated: 25 Nov 2021 2:10 PM GMT)

தோப்புகளில் தென்னை மட்டைகள் தேக்கம்

நெகமம்

தென்னை நார் தயாரிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட தால் தோப்புகளில் தென்னை மட்டைகள் தேக்கம் அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். 

தென்னை நார் தொழிற்சாலைகள் 

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடந்து வருகிறது. குறிப்பாக பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. 
இதில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தேங்காய்களை எடுத்த பின்னர் அதன் மட்டையில் இருந்து நார், நார் கழிவுகள் உள்பட பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப் பட்டு வருகின்றன. இதனால் இந்தப்பகுதியில் தென்னை நார் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. 

பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு

இந்த தொழிற்சாலைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.3,500 கோடிக்கும் மேல் தென்னை நார் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் தென்னை நார் மற்றும் நார் துகள் (பித்) உற்பத்தி செய்ய தென்னை மட்டைகளை பரப்பி  அதன் மீது தண்ணீர் தெளித்து, அது ஊறிய பின்னர் எந்திரங்கள் மூலம் நார் பிரித்தெடுக்கப்படுகிறது. 

இதில் இருந்து கிடைக்கும் நார் கழிவு (பித்) பலமுறை தண் ணீரில் சுத்திகரிக்கப்பட்டு கடடிகளாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நார்கட்டி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீர் விவசாய நிலங்களிலும், நீர்நிலை களிலும், சாலையோரங்களிலும் சுத்திகரிப்பு செய்யாமல் விடப் படுவதால் நிலம் மற்றும் நீர் மாசு அடைவதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
கடும் கட்டுப்பாடுகள் 
இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து மாசுகளின் அளவு குறித்து தெரிவிக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த மாதம் ஆய்வு செய்து கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில் நீரில் அதிகளவிலான மாசு இருப்பது தெரியவந்தது. 
இதையடுத்து, தமிழகத்தில் தென்னை நார் தொழிற்சாலைகள் வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியலில் இருந்து ஆரஞ்சு வகை தொழிற்சாலைகள் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அத்துடன் தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. நார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால், தேங்காய் மட்டைகள் தேக்கம் அடைந்து உள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். 

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- 

தென்னை மட்டைகள் தேக்கம் 

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தென்னை நார் தொழிலுக்கு 15 வகையான கட்டுப்பாடுகள் விதித்து உள்ளன. இதனால் நார் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. உற்பத்தியும் நடக்கவில்லை. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. 
அத்துடன் தேங்காய் மட்டைகளை யாரும் வாங்குவது இல்லை. இதன் காரணமாக தோட்டங்களில் அவை குவித்து வைக்கப்பட்டு உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு தேங்காய் மட்டை ரூ.3.40-க்கு விற்பனையானது. தற்போது ரூ.1.50-க்கே விற்பனை யாகி வருகிறது. போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் அவற்றை கொடுப்பது இல்லை. 

தென்னைநார் தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கினால் மட்டுமே தேங்காய் மட்டைகளுக்கு உரிய விலை கிடைக்கும். எனவே இந்த தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்டு உள்ள கட்டுப்பாடுகளை மாற்றி, அவற்றை மீண்டும் வெள்ளை வகை பட்டியலில் அறிவிக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story