எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகள் இணைப்பு


எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகள் இணைப்பு
x
தினத்தந்தி 25 Nov 2021 7:17 PM GMT (Updated: 25 Nov 2021 7:17 PM GMT)

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகள் நேற்று முதல் இணைக்கப்பட்டன.

மதுரை, நவ.26-
எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகள் நேற்று முதல் இணைக்கப்பட்டன.
கூடுதல் கட்டணம்
கொரோனா பெருந்தொற்றால், நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பொது போக்குவரத்து முடக்கப்பட்டது. பின்னர், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ரெயில்சேவை தொடங்கியது. ஆனால், ரெயில்வே துறை அனைத்து ரெயில்களையும் சிறப்பு மற்றும் பண்டிகைகால சிறப்பு ரெயில்களாக கூடுதல் கட்டணத்துடன் இயக்கியது. பொதுப்பெட்டிகள் அனைத்தும் முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டது. பிளாட்பார டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது வரை பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படவில்லை. 
இந்தநிலையில், அனைத்து ரெயில்களும் வழக்கமான ரெயில்களாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது. இருப்பினும் 120 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு செய்த பயணிகளுக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப வழங்க முடியாது என அறிவித்துள்ளது. ஆனால், கட்டணம் உயர்த்தப்பட்டால், பயணம் செய்யும்போது டிக்கெட் பரிசோதகரிடம் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும். 
பொது பெட்டிகள்
தற்போது, எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல, ஒவ்வொரு ரெயில்வே மண்டலத்திலும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் பிளாட்பார டிக்கெட் கட்டணம் பழைய படி ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
அதனை தொடர்ந்து, மதுரை கோட்டத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல் மற்றும் நெல்லை ரெயில் நிலையங்களில் நேற்று நள்ளிரவு முதல் பிளாட்பார டிக்கெட் கட்டணம் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மதுரை கோட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story