தோட்டத்து மின்வேலியில் சிக்கி வாலிபர் சாவு; தோட்ட உரிமையாளரை அடித்து கொன்ற உறவினர்கள்


தோட்டத்து மின்வேலியில் சிக்கி வாலிபர் சாவு; தோட்ட உரிமையாளரை அடித்து கொன்ற உறவினர்கள்
x
தினத்தந்தி 25 Nov 2021 10:10 PM GMT (Updated: 25 Nov 2021 10:10 PM GMT)

சிக்பள்ளாப்பூர் அருகே, தோட்டத்து மின்வேலியில் சிக்கி வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள், தோட்ட உரிமையாளரை அடித்து கொன்ற பயங்கரம் நடந்து உள்ளது.

சிக்பள்ளாப்பூர்:

மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

  சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகா சரக்கமதேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அஸ்வத்ராவ் (வயது 55). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் கிராமத்தில் உள்ளது.

  அந்த தோட்டத்தில் அஸ்வத்ராவ் தக்காளி பயிரிட்டு வளர்த்து வந்தார். இந்தநிலையில் தக்காளி விலை உயர்ந்து உள்ளதால் இரவு நேரத்தில் தக்காளியை யாரும் பறித்து சென்று விட கூடாது என்பதற்காக தனது தோட்டத்தை சுற்றி அஸ்வத்ராவ் மின்வேலி அமைத்து இருந்தார். 

  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த நிலத்தின் அருகே சென்ற சரக்கமதேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த வசந்தகுமார் (31) என்பவர் அந்த தோட்டத்தின் வழியாக சென்று உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மின்வேலியில் சிக்கி கொண்டார். இதனால் அவரை மின்சாரம் தாக்கியது.

  இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அடித்து கொலை

  இந்த நிலையில் நேற்று மதியம் அஸ்வத்ராவ் தனது தோட்டத்தின் அருகே நின்றார். அப்போது அங்கு வந்த வசந்தகுமாரின் உறவினர்கள், வசந்தகுமார் சாவுக்கு நீ தான் காரணம் என்று கூறி அஸ்வத்ராவை கம்பி, கட்டையால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிக்பள்ளாப்பூர் போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார், கவுரிபிதனூர் போலீசார் அங்கு சென்று அஸ்வத்ராவின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  விசாரணையில் தக்காளியை பாதுகாக்க போடப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி வசந்தகுமார் இறந்ததால், அஸ்வத்ராவை வசந்தகுமாரின் உறவினர்கள் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கவுரிபிதனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

  ேமலும் வசந்தகுமார் தக்காளி திருட முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story