ஈங்கூரில் ரெயில்வே சரக்கு முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்- சேலம் கோட்ட பொதுமேலாளர் பேட்டி


ஈங்கூரில் ரெயில்வே சரக்கு முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்- சேலம் கோட்ட பொதுமேலாளர் பேட்டி
x
தினத்தந்தி 26 Nov 2021 12:50 AM GMT (Updated: 26 Nov 2021 12:50 AM GMT)

ஈங்கூரில் ரெயில்வே சரக்கு முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் கூறினார்.

ஈரோடு
ஈங்கூரில் ரெயில்வே சரக்கு முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் கூறினார். 
ஆய்வு
ஈரோடு ரெயில் நிலையத்தில், சேலம் கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் மற்றும் ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் பயணிகள் பாதுகாப்பு, மேம்பாட்டு பணிகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் சேலம் கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
மாநில நெடுஞ்சாலை துறையினருடன் சேர்ந்து கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தை ஆய்வு செய்தோம். அதனை விரிவுபடுத்தி வாகன நெரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு ரெயில் நிலையத்தை மேம்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் கருத்துகள் கேட்டுள்ளோம். கள ஆய்வும் செய்துள்ளோம். ஈரோடு ரெயில் நிலையத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
பயணிகள் ரெயில்
ஈரோடு, சேலம் கோட்டத்தில் பயணிகள் ரெயில் இயக்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும். நெரிசல் குறைவாக உள்ள இடங்களில் பொது ரெயில் பெட்டிகள் இயங்க ஆரம்பித்து விட்டது. தமிழ்நாட்டில் எப்போது இயக்கப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் தான் முடிவு செய்யும்.
ரெயில்வே நுழைவு பாலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க மோட்டார் வைத்து தண்ணீர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நிரந்திர தீர்வாக மேற்கூறை அமைத்து நுழைவு பாலங்களில் தண்ணீர் உள்ளே செல்லாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சரக்கு முனையம்
ஈங்கூரில் ரெயில்வே சரக்கு முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகள் முடியும் போது ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள சரக்கு போக்குவரத்து நெரிசல் குறையும். ஈரோடு ரெயில் நிலையம் மிக முக்கியமானது என்பதால், இங்கு பயணிகள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, விபத்து நடக்கும்போது அனுப்பப்படக் கூடிய எமர்ஜென்சி ரெயில்கள் அனைத்தும் இங்கு உள்ளன.
இந்த காரணத்தினால் நடைமேடைகளை அதிகப்படுத்த சாத்தியக்கூறுகள் மிக குறைவு. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நடைமேடை டிக்கெட் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. கொரோனா கட்டுக்குள் வந்ததும் மீண்டும் கட்டணம் மாற்றி அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story