கொடிவேரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு


கொடிவேரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு
x
தினத்தந்தி 26 Nov 2021 12:50 AM GMT (Updated: 26 Nov 2021 12:50 AM GMT)

கொடிவேரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.

ஈரோடு
கொடிவேரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார். 
குடிநீர் திட்ட பணிகள்
பெருந்துறை அருகே உள்ள திங்களூர் கருக்குப்பாளையம் பிரிவில் நேற்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தமிழ்நாடுகுடிநீர் வடிகால் வாரியம் மூலம் கொடிவேரி அணையை நீர் ஆதாரமாககொண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள், கொடிவேரி தலைமை நீருந்து நிலையம் மற்றும் கொடிவேரி தடுப்பணை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெருந்துறை பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேல்நிலை தொட்டி வளாகத்தில் ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பெருந்துறை மற்றும் 7 பேரூராட்சிகள், 547 வழியோர ஊரக குடியிருப்புகளுக்கான கொடிவேரி அணையை நீர் ஆதாரமாக கொண்ட ரூ.227 கோடி மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
பயன்பெறுகிறது
கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 28 கிராம ஊராட்சிகள் பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிகோவில், நல்லாம்பட்டி, பள்ளபாளையம் மற்றும் பெத்தாம்பாளையம் பேரூராட்சிகள், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 4 கிராம ஊராட்சிகள் (27 குடியிருப்புகள்) மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 37 ஊராட்சிகள் (283 குடியிருப்புகள்) மற்றும் ஊத்துக்குளி, குன்னத்தூர் பேரூராட்சிகள் பயன்பெறுகின்றது.
தற்போது தனிநபருக்கு நாளொன்றுக்கு ஊரகப் பகுதிகளில் 25 முதல் 45 லிட்டர் வீதமும் பேரூராட்சி பகுதிகளில் 60 லிட்டர் ்வீதமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஊரகப் பகுதிகளுக்கு 55 லிட்டர் வீதமும் பேரூராட்சி பகுதிகளுக்கு 90 லிட்டர் வீதமும் வழங்கவேண்டும்.
135 லிட்டர் குடிநீர்
மக்கள் தொகைபெருக்கம் மற்றும் குடிநீர்தேவைக்கேற்ப இப்புதிய கூட்டுகுடிநீர்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக தனிநபருக்கு நாளொன்றுக்கு ஊரகப் பகுதிகளில் 55 லிட்டர் வீதமும், பேரூராட்சி பகுதிகளில் 135 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
இந்த ஆய்வுகளின் போது தமிழ்நாடுகுடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் சி.வீரராஜன், செயற்பொறியாளர் கே.ஜி.சுதாமகேஷ், நிர்வாக பொறியாளர் சி.வடிவேல் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் சென்றனர்.
தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 437 மையங்களில் ஒரு லட்சம் பேருக்கு 11-வது மாபெரும் தடுப்பூசி முகாம் நடந்தது. ேகாபி அருகே சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலையம், திங்களூர் சி.எஸ்.ஐ. தொடக்கபள்ளிஆகியவற்றில் நடந்த முகாமை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் திங்களூர் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவிற்காக மசாலா முட்டையுடன் தயாரிக்கப்பட்ட கலவை சாதத்தை ருசி பார்த்து உணவின் சுவை மற்றும் தரத்தினை ஆய்வு செய்தார். மேலும் அங்கு மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்த குழந்தைகளிடம் தினமும் உணவு சுவையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

Next Story