10 நாட்களாக 104 அடியில் நீடிக்கும் பவானிசாகர் அணை நீர்மட்டம்


10 நாட்களாக 104 அடியில் நீடிக்கும் பவானிசாகர் அணை நீர்மட்டம்
x
தினத்தந்தி 30 Nov 2021 3:08 PM GMT (Updated: 30 Nov 2021 3:08 PM GMT)

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் கடந்த 10 நாட்களாக 104 அடியாகவே நீடித்து வருகிறது.

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் கடந்த 10 நாட்களாக 104 அடியாகவே நீடித்து வருகிறது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை மற்றும் தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடி ஆக கணக்கிடப்படுகிறது.
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.
நீர்வரத்து அதிகரிப்பு
தற்போது பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 28 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீரும் உபரிநீராக திறக்கப்பட்டது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 5 ஆயிரத்து 836 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 104.13 அடியாக உயர்ந்தது.
நீர்மட்டம் 104 அடி
அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது. அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் நேற்று காலை 10 மணி முதல் நிறுத்தப்பட்டது.
பவானிசாகர் அணை நீர்மட்டம் கடந்த 20-ந் தேதி முதல் நேற்று வரை 104 அடியாகவே உள்ளது. இதன் மூலம் கடந்த 10 நாட்களாக பவானிசாகர் அணை நீர்மட்டம் 104 அடியாக நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story