கோவிலம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவன் பலி


கோவிலம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவன் பலி
x
தினத்தந்தி 2 Dec 2021 12:09 AM GMT (Updated: 2 Dec 2021 12:09 AM GMT)

வீட்டில் வெந்நீரில் குளிப்பதற்காக ‘வாட்டர் ஹீட்டர்’ மூலம் தண்ணீரை சூடு செய்தபோது மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவன் பரிதாபமாக இறந்தான்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் சத்யா நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மகன் ஷியாம் (வயது 15). இவர், அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று காலை ஷியாம், வெந்நீரில் குளிப்பதற்காக வீட்டில் ‘வாட்டர் ஹீட்டர்’ மூலம் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடு செய்து கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து தண்ணீர் சுட்டு விட்டதா? என தண்ணீரில் விரலை விட்டு பார்த்தார்.

மின்சாரம் தாக்கி பலி

அப்போது ஷியாமை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவன் ஷியாம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story