தாளவாடி மலைக்கிராமத்தில் மழைநீர் ஒழுகும் அரசு பஸ்சில் நின்றபடி பயணித்த மாணவிகள்; வலைதளத்தில் வைரலாகும் தகவல்

தாளவாடி மலைக்கிராமத்தில் மழைநீர் ஒழுகும் அரசு பஸ்சில் நின்றபடி மாணவிகள் பயணித்த காட்சி வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தாளவாடி
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 100-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் அரசு பஸ்சில் சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் பள்ளிக்கூடம் முடிந்து மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 15 பேரை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் தாளவாடியில் இருந்து பெலத்தூருக்கு நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. பஸ் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மழை பெய்ய தொடங்கியது.
பஸ்சின் மேற்பரப்பில் துவாரம் உள்ளது. இதன் வழியாக மழைநீர் ஒழுகியது. பஸ்சின் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவ-மாணவிகள், பயணிகள் மீது சொட்டு, சொட்டாக விழுந்தது. இதனால் அவர்கள் இருக்கையில் இருந்து எழுந்து பஸ்சில் துவாரம் இல்லாத இடத்தில் நின்று பயணம் செய்தனர். இதனை பஸ்சில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடனே இதனை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story






