ஓசூர் அருகே பரபரப்பு அரசு பள்ளி ஆசிரியையை தாக்கிய பிளஸ் 1 மாணவர் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை


ஓசூர் அருகே பரபரப்பு அரசு பள்ளி ஆசிரியையை  தாக்கிய பிளஸ் 1 மாணவர் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை
x

ஓசூர் அருகே அரசு பள்ளி ஆசிரியையை பிளஸ் 1 மாணவர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓசூர்:
ஓசூர் அருகே அரசு பள்ளி ஆசிரியையை பிளஸ்-1 மாணவர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆசிரியை மீது தாக்குதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மாசிநாயக்கனப்பள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 1-ந்தேதி, ஆங்கில முதுகலை பட்டதாரி ஆசிரியை இந்திரா(வயது42) என்பவர் வகுப்பில் பிளஸ்-1 மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார்.
அப்போது ஒழுங்கீனமாக இருந்த ஒரு மாணவரை அவர் கண்டித்ததால் அந்த மாணவருக்கும், ஆசிரியைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், ஆசிரியையின் கன்னத்தில் 2 முறை ஓங்கி அறைந்து கீழேயும் தள்ளி விட்டுள்ளார். இதனால் அந்த ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உடனடியாக அவர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம், மாணவரின் அடாத செயல் குறித்து புகார் அளித்தார்.
கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை
இந்த சம்பவம், பள்ளியில் பணியாற்றி வரும், ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் மாணவ-மாணவிகளிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர்கள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
ஆசிரியையின் கன்னத்தில் அடித்த மாணவர் மீது இதுவரை கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனிடையே, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அரசு பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே ஆசிரியையை தாக்கிய மாணவரை உடனடியாக தற்காலிக நீக்கம்(சஸ்பெண்டு) செய்ய வேண்டும், அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்திட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story