பாபர் மசூதி இடிப்பு தினம்: த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்


பாபர் மசூதி இடிப்பு தினம்: த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2021 11:54 PM GMT (Updated: 6 Dec 2021 11:54 PM GMT)

பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை,

பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விடுதலை சிறுத்தை கட்சி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, பேராசிரியர் கர்ணனாதன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகி அமீன் அஹமத் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது எம்.எச்.ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-

1991-ல் ஏற்றப்பட்ட வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் இருக்கும் அனைத்து வழிப்பாட்டு தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 38 முஸ்லிம் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்ய வேண்டும் என்ற எங்களது கோரிக்கை சட்டமன்றத்தில் முன் வைத்தேன். நான் வைத்த இந்த கோரிக்கையின் அடிப்படையில்தான் முதல்-அமைச்சர், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் அன்று 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் யாக்கூப் தலைமையில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதேபோல் சென்னை மயிலாப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் 150 இடங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

Next Story