பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்குகிறது- பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்குகிறது- பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 Dec 2021 8:16 PM GMT (Updated: 9 Dec 2021 8:16 PM GMT)

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 105 அடியை நெருங்குகிறது. இதனால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 105 அடியை நெருங்குகிறது. இதனால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை மற்றும் தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. இந்த அணையின் மொத்த நீர் பிடிப்பு கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும்.
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.
நீர்வரத்து அதிகரிப்பு
தற்போது பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு சராசரியாக அதிகரித்துள்ளது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 622 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 104.71 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 600 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,800 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
வெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்ட, இன்னும் குறைந்த அளவு தண்ணீரை தேவைப்படுகிறது. இதனால் அணையில் இருந்து எந்த நேரமும் உபரி நீர் திறக்கப்படும் என்பதால் பொதுப்பணித்துறை சார்பில் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் அணையின் தண்ணீர் வரத்தை பவானிசாகர் அணை பிரிவு உதவி செயற்பொறியாளர் பாலாஜி தலைமையில் பொதுப்பணித்துறையினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

Next Story