ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 14 Dec 2021 9:03 PM GMT (Updated: 14 Dec 2021 9:03 PM GMT)

ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு
ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோட்டை பெருமாள்
ஈரோடு கோட்டை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 4-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் நேற்று முன்தினம் வரை பகல் பத்து உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று முன்தினம் மாலை பெருமாளுக்கு மோகினி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று அதிகாலை 3 மணிக்கு கஸ்தூரி அரங்கநாதரின் உற்சவ சிலைக்கு திருமஞ்சனம் நடந்தது. இதில் பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சொர்க்க வாசல் திறப்பு
அதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பின்னர் சப்பரத்தில் எழுந்தருளிய பெருமாள் பரமபத வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டார்.
அதைத்தொடர்ந்து காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தடுப்புகள் அமைக்கப்பட்டு ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்ற பக்தர்கள் பரமபத வாசலில் நுழைந்து கோவிலை சுற்றி வந்து கோபுர தரிசனம் செய்த பின்னர் மூலவரை வழிபட்டு வெளியே வரும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.
முத்தங்கி சேவை
ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். கொரோனா பரவல் காரணமாக கோவிலில் அமர பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் முக கவசம் இல்லாமல் வந்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பாதுகாப்பு பணிகளில் போலீசார், ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
வருகிற 23-ந்தேதி வரை ராபத்து உற்சவ நிகழ்ச்சியும், முத்தங்கி சேவையும் நடக்கிறது. 23-ந்தேதி இரவு 7 மணிக்கு நம்மாழ்வார் மோட்சம், திருவாசல் சாற்றுமுறையுடன் விழா நிறைவடைகிறது.

Next Story