1,848 அடுக்குமாடி வீடுகள் வழங்கப்படுவது எப்போது?


1,848 அடுக்குமாடி வீடுகள் வழங்கப்படுவது எப்போது?
x
தினத்தந்தி 19 Dec 2021 4:10 PM GMT (Updated: 19 Dec 2021 4:10 PM GMT)

கவுண்டம்பாளையத்தில் வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட 1,848 அடுக்குமாடி வீடுகள் வழங்கப்படுவது எப்போது? என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

துடியலூர்

கவுண்டம்பாளையத்தில் வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட  1,848 அடுக்குமாடி வீடுகள் வழங்கப்படுவது எப்போது? என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பு

கோவை கவுண்டம்பாளையத்தில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ரூ.522 கோடி செலவில் 8 பிளாக்குகளாக 1,848 அடுக்குமாடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. அரசு ஊழியர்களுக்காக கட்டப்பட்ட இந்த குடியிருப்பில் ஒவ்வொரு பிளாக்கும் 14 மாடிகள் கொண்டது. 

இதில், குறிப்பிட்ட வீடுகள் வாடகைக்கும், குறிப்பிட்ட வீடுகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் வருவாய் பிரிவிற்கு ஏற்ப இந்த வீடுகள் 4 வகையாக பிரிக்கப்பட்டு பயனாளிக ளுக்கு வழங்கப்பட உள்ளது. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் அனைத்து சாவிகளும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

வாடகை திட்டம்

இதையடுத்து கலெக்டர் மூலமாக ஒதுக்கீடு உத்தரவுகள் வழங்கப்படும் வரை யாருக்கும் வீடுகள் ஒதுக்கீடு இல்லை என்று  அறிவிக்கப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பில் அனைத்து பணிகளும் முடிந்து ஓராண்டு ஆகினது. இதற்கிடையே அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வாடகை அடிப்படையில் பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் திட்டத்தை கடந்த மாதம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆனால் இன்னும் அந்த வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இது குறித்து சிலர் கூறியதாவது:- 

7 ஆண்டிற்கு மேலாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப்பணிகள் நடைபெற்றது. வீடுகளுக்கு தேவையான குடிநீர், கழிவுநீர் இணைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. இதனால் வீடுகள் எப்போது வழங்கப்படும் என்று பயனாளிகள் காத்திருந்தனர். நீண்ட காத்திருப்புக்கு பிறகு முதல்-அமைச்சர், பயனாளிகளுக்கு வீடுகளை வாடகைக்கு விடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பிறகும் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. 

காட்சி பொருள்

பராமரிப்பு பணிக்காக ரூ.72 லட்சம் செலவில் டெண்டர் விடப்பட்டு உள்ளது. ஆனாலும் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்காமல் இன்னும் எவ்வளவு நாட்கள் காட்சிப் பொருளாக வைத்திருப்பார்கள் என்று தெரிய வில்லை.மேலும் இந்த வீடுகளை அப்படியே விட்டால் சமூக விரோத செயல்களுக்கு வாய்ப்பாகி விடும். 

ஆகவே குறிப்பிட்ட காலத்தில் வீடுகளை பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்தால் வீட்டு வசதி வாரியத்திற்கு கணிசமான வருவாய் கிடைக்கும். இல்லாவிட்டால் வருவாய் இழப்பு ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.எனவே கவுண்டம்பாளையத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட 1,848 அடுக்குமாடி வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.


Next Story