கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் சாலைமறியல்

பட்டா இல்லாததால் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை
பட்டா இல்லாததால் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த நெ.2 கூடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்சா நகரை சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர்.
அப்போது அவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் ஒரு பெண் சாலையில் படுத்து உருண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அங்கு சென்ற போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நோட்டீஸ்
அதில், கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்காக கலெக்டர் அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும் போலீசார் எச்சரித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், அம்சா நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 10 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். பேரூராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்படுகிறது. மின்சார வசதி மற்றும் பட்டா கேட்டு வருகிறோம். இதற்கிடையில் திடீரென வருவாய்த்துறையினர் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கி உள்ளனர். எனவே உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story






