வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை தரையில் ஊற்றி அழிப்பு


வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை தரையில் ஊற்றி அழிப்பு
x
தினத்தந்தி 28 Dec 2021 10:24 PM IST (Updated: 28 Dec 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை தரையில் ஊற்றி அழிப்பு

பொள்ளாச்சி

வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை தரையில் ஊற்றி மதுவிலக்கு போலீசார் அழித்தனர்.

மதுபாட்டில்கள் பறிமுதல்

கோவை மாவட்டம் பேரூர் மதுவிலக்கு போலீஸ் நிலையம் பொள்ளாச்சியில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தையையொட்டி கேரள மாநிலம் இருப்பதால், அங்கிருந்து மதுபாட்டில்களை அதிகமாக பொள்ளாச்சிக்கு கடத்தி வருகின்றனர். இதை தவிர டாஸ்மாக் கடைகளில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி, சிலர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

இதைதடுக்க மதுவிலக்கு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை பாதுகாப்பாக பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிக்க கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் மதுபாட்டில்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மதுபாட்டில்கள் அழிப்பு

பொள்ளாச்சியை அடுத்த ஆ.சங்கம்பாளையத்தில் உள்ள அரசு புறம்போக்கு குட்டை பகுதிக்கு மதுபாட்டில்களை போலீசார் சரக்கு வாகனத்தில் எடுத்து வந்தனர். அங்கு மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ், கோட்ட கலால் அலுவலர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் மதுபாட்டில்களை இறக்கி எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டது.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேந்தர், பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் போலீசார் மதுபாட்டில்களின் மூடியை கழற்றி குட்டையில் மதுவை ஊற்றி அழித்தனர். இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் கூறுகையில், கடந்த மே மாதம் அக்டோபர் மாதம் வரை கேரளா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 1761 மதுபாட்டில்கள் உள்பட மொத்தம் 12 ஆயிரத்து 79 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதன் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.  பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் தரையில் ஊற்றி அழிக்கப்பட்டது. மூடியுடன் காலி பாட்டில்கள் ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
1 More update

Next Story