ரேஷன்கடை விற்பனையாளர் உள்பட 2 பேர் சாவு


ரேஷன்கடை விற்பனையாளர் உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 12 Jan 2022 6:19 PM GMT (Updated: 12 Jan 2022 6:19 PM GMT)

சிவகங்கை அருகே நடைபெற்ற இரு வெவ்வேறு விபத்துக்களில் ரேஷன் கடை விற்பனையாளர் உள்பட 2 பேர் இறந்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை அருகே நடைபெற்ற இரு வெவ்வேறு விபத்துக்களில் ரேஷன் கடை விற்பனையாளர் உள்பட 2 பேர் இறந்தனர்.

ரேஷன்கடை விற்பனையாளர் சாவு

சிவகங்கை அடுத்த மாடக்கோட்டையை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). இவர் அருகே உள்ள செங்குளம் என்ற ஊரில் ரேஷன் கடை விற்பனையாளர் ஆக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று பணி முடித்து தன்னுடைய நண்பரான மாடகோட்டையைச் சேர்ந்த சின்னையா (42) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.
 அவர்கள் சலுகைச்சாமிபுரம் என்ற இடம் அருகே வந்த போது எதிரே வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சண்முகமும், சின்னையாவும் பலத்த காயமடைந்தனர். உடனே அவர்கள் 2 பேரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகம் இறந்தார். சின்னையா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மற்றொரு சம்பவம்

சிவகங்கையை அடுத்த கள்ளிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (30) சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். சிவகங்கை அடுத்த பாவாகுடி என்ற இடம் அருகே சென்ற போது அந்த வழியில் இருந்த வேகத்தடையில் மோதி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.அங்கு சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.  இதுதொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

Next Story