‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 13 Jan 2022 9:48 AM GMT (Updated: 13 Jan 2022 9:48 AM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆவடி மாநகராட்சியின் உடனடி நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீட்டு வசதி வாரியம் செக்டார் 18-வது மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பது பற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பாதாள சாக்கடைக்கு புதிய மூடி பொருத்தியுள்ளனர்.



மீண்டும் மின்விளக்கு பொருத்தப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கன்னிவாக்கம் கிராமத்தில் ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் சேதமான மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் பொருத்தப்பட்டது. ஆனால் மின்கம்பத்தில் இருந்த மின்விளக்கும் சேர்த்து அகற்றப்பட்டதால் அப்பகுதி மக்களின் வேதனையும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு மீண்டும் மின்விளக்கு பொருத்தப்பட்டு உள்ளது.

நடுத்தெருவில் இருந்த மின்கம்பம் அகற்றம்

சென்னை கொளத்தூர் அன்னை இந்திரா தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக நடுத்தெருவில் மின்கம்பம் இருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து மின்வாரியம் சார்பில் உடனடியாக அந்த கம்பம் அகற்றப்பட்டு உள்ளது. தங்களது நீண்ட கால கோரிக்கை நிறைவேறியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மின்வாரியத்துக்கும், ‘தினத்தந்தி’க்கும் நன்றி தெரிவித்து உள்ளனர்.



கழிவுநீர் பிரச்சினை

சென்னை திருவொற்றியூர் காமராஜர் நகர் 2-வது தெருவில் ஒரு மாதமாகவே கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இக்கழிவுநீரை கடந்தே வெளியே செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. தேங்கிய கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களின் படையெடுப்பும் மிகுதியாக இருக்கிறது. இதனால் நோய் பரவும் சூழல் உருவாகி இருக்கிறது. எங்கள் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

- காமராஜர் நகர் 2-வது தெரு மக்கள்.

எரியாத தெருவிளக்கு

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை தாலுகா கிருஷ்ணா குப்பம் மேடு (கிழக்கு) ராமர் கோவில் தெருவில் கடந்த ஒரு மாத காலமாக தெருவிளக்கு எரியாத நிலையிலேயே இருக்கிறது. இதனால் மாலை மற்றும் இரவு வேளைகளில் பொதுமக்கள் இப்பகுதியில் நடமாடவே சங்கடப்படுகிறார்கள். மக்கள் நலனை கருத்தில்கொண்டு மின்வாரியம் உடனடி நடவடிக்கைகளை கையாள வேண்டும்.

- கே.இ.சிவலிங்கம், திருவள்ளூர்.

பழுதான ஆட்டோ அப்புறப்படுத்தப்படுமா?

சென்னை கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் வள்ளலார் தெருவில் பல மாதங்களாக பயன்படுத்த முடியாத நிலையில் ஒரு பழுதடைந்த ஆட்டோ நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதில் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. நாய்கள் கூடாரமாகவும் மாறியிருக்கிறது. சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த ஆட்டோவை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

- பொதுமக்கள், வள்ளலார் தெரு.



பயன்பாட்டுக்கு வராத கழிப்பறை

திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தனியார் அமைப்பு மூலம் கடந்த 2018-ம் ஆண்டு கழிப்பறை கட்டி தரப்பட்டது. ஆனால் இதுவரை இக்கழிப்பறை பயன்பாட்டுக்கு வராமல் மூடியே கிடக்கிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வருவோர் குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள், முதியோர் சிரமப்படுகிறார்கள். எனவே மக்கள் நலனை கருத்தில்கொண்டு இந்த கழிப்பறையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அத்திப்பட்டு பொது நலச்சங்கம்.

தெருநாய்கள் தொல்லை

காஞ்சீபுரம் மாவட்டம் கெருகம்பாக்கம் மாதா நகர் விரிவு குடியிருப்பு, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலையூர் வட்டம் சாலமன் தெரு, பள்ளிக்கரணை பெரியார் நகர் நக்கீரன் தெரு, சிங்கப்பெருமாள் கோவில் சன்னதி சாலை ஸ்ரீவாரி நகர் ஆகிய இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

-பொதுமக்கள்.

ஆபத்தான மின்கம்பம்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் தென்பட்டினம் கிராமம் சீ பிரீஸ் பகுதியில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. சிமெண்ட் பூச்சுகள் பெருமளவு உதிர்ந்து எலும்புக்கூடு போன்று காட்சி அளிக்கிறது. பலத்த காற்றடித்தால் சாய்ந்துவிழும் அளவுக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உரிய களஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- பொதுமக்கள், தென்பட்டி கிராமம்.



கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு

சென்னை திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளைத் தெரு, பாடி மூர்த்தி நகர், சத்தியாவதி நகர், இளங்கோ நகர், சக்தி நகர், சென்னை ராஜா அண்ணமலைபுரம் சவுத் கேசவ பெருமாள்புரம், திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு, செங்கல்பட்டு மணிக்கூண்டு அருகே ஆகிய பகுதிகளில் சாலை நடுவே ஏராளமான மாடுகள் குறுக்கும் நெடுக்குமாக போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிகின்றன. இதனால் மிகுந்த சிரமத்துக்கு இடையே வாகனங்களை இயக்கும் நிலைமை உள்ளது. சாலையில் செல்ல முதியோரும் அச்சப்படுகிறார்கள். எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து சென்று உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

-பொது மக்கள்.



Next Story