தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 13 Jan 2022 2:57 PM GMT (Updated: 13 Jan 2022 2:57 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-


குண்டும் குழியுமான சாலை

நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட ஒசட்டி பள்ளத்தில் இருந்து ஆரோக்கியபுரம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். இது குறித்து புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
சகாயநாதன், ஆரோக்கியபுரம். 

சாலையில் புதர்கள் ஆக்கிரமிப்பு 

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி அண்ணாநகரில் இருந்து காந்திநகர் செல்லும் இணைப்பு சாலை வரை இருபுறமும் புதர்கள் ஆக்கிரமித்து காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
மேலும் மாலை இரவில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நிற்பது கூட தெரியாமல் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பு இந்த சாலையில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும். 
பிரகாஷ், கூடலூர்

இருள் சூழ்ந்த பகுதி

கோவை அருகே உள்ள காரேகவுண்டன்பாளையம், கெம்பநாயக்கன் பாளையம் சாய் அன்பு நகரில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் அங்கு இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இரவு நேரத்தில் குழந்தைகள் வெளியே வர பயப்படுகிறார்கள். அத்துடன் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பகுதிக்கு தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.
இளங்குமரன், சாய்அன்பு நகர். 

ஆபத்தான மரம் 

கோவை ஹூசூர் ரோட்டில், சாலையோரம் நடைபாதையில் ஒரு மரம் உள்ளது. அந்த மரம் காய்ந்து எந்த நேரத்திலும் விழக்கூடிய நிலை உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அத்துடன் நடைபாதை வழியாக பள்ளி மாணவர்களும் நடந்து செல்கிறார்கள். எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க ஆபத்தான நிலையில் உள்ள அந்த மரத்தை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும்.  
சுலைமான், கோவை.

பாதியில் நிற்கும் சாலைபணி 

கிணத்துக்கடவு அருகே உள்ள ரங்கேகவுண்டன் புதூரில் இருந்து முத்து கவுண்டனூர் பிரிவு சொல்லு வழியில் உள்ள சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டு ஜல்லிகள் கொட்டப்பட்டு உள்ளது. ஆனால் பல மாதங் கள் ஆகியும் சாலை பணி தொடங்கவில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு பாதியில் நிற்கும் சாலை பணியை தொடங்க வேண்டும்.
சிவகுமார், முத்துக்கவுண்டன்புதூர். 

கூடுதல் தெருவிளக்குகள் வேண்டும்

சுல்தான்பேட்டை ஒன்றியம் செலக்கரிச்சல், அப்பநாயக்கன்பட்டி, பாப்பம் பட்டி உள்ளிட்ட இடங்களில் போதிய அளவில் தெரு விளக்கு வசதி இல்லை. இதன் காரணமாக இரவு நேரங்களில் இந்த கிராமங்கள் வழியாக வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். அத்துடன் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூடுதலாக தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். 
ராமசாமி, பாப்பம்பட்டி.

தினத்தந்தி செய்தி எதிரொலி:
ஆபத்தான குழி சரிசெய்யப்பட்டது

கோவை பாலசுந்தரம் ரோட்டில் போலீஸ் பயிற்சி பள்ளி நுழைவு வாசல் எதிரே குழி இருந்தது. சாலையின் நடுவே உள்ள இந்த குழியில் இருந்து குடிநீரும் வீணாக வெளியேறியது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழியை சரிசெய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி. 
சந்தோஷ், கோவை. 

இறைச்சி கழிவுகளால் அவதி

பொள்ளாச்சி நகராட்சி சர்க்கஸ் மைதானம் அருகே அதிகளவில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதன் அருகில் பள்ளி மற்றும் கல்லூரி உள்ளதால் மாணவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. எனவே தொற்றுநோய் பரவுவதற்கு முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். 
சரவணன், பொள்ளாச்சி.

தெருநாய்கள் தொல்லை

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரத்தில் கூட்டங்கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கிறது. இதனால் பலர் தனியாக நடந்து செல்பவர்கள் பயத்துடன் செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். 
மணிகண்டன், மகாலிங்கபுரம். 

போக்குவரத்து நெரிசல்

பொள்ளாச்சியில் உள்ள தியேட்டர் முன்பு 4 ரோடு சந்திப்பு உள்ளது. இங்கு சிக்னல் இல்லை. அத்துடன் அங்கு போக்குவரத்தை கண்காணிக்க பேரீசாரும் நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு அங்கு போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்.
முத்துகிருஷ்ணன், பொள்ளாச்சி. 



Next Story