வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது


வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
x
தினத்தந்தி 15 Jan 2022 3:12 PM GMT (Updated: 15 Jan 2022 3:12 PM GMT)

கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால், வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

வால்பாறை

கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால், வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

பொங்கல் பண்டிகை

வால்பாறையை பொறுத்தவரை அனைத்து எஸ்டேட் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில்களிலும் மிகவும் சிறப்பாக கொண்டாடக்கூடிய ஒரே பண்டிகை பொங்கல் மட்டுமே. பெரும்பாலான எஸ்டேட் நிர்வாகங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை தருவார்கள். அப்போது வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுடன் சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாடுவாார்கள்.

எளிமையான முறையில்...

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு கட்டுப்பாடுகளை விதித்ததால் வால்பாறையில் பொங்கல் பண்டிகை எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. குறிப்பாக வால்பாறையில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் சிறப்பு அம்சமே கரகாட்டம்தான். ஆனால் இந்த ஆண்டு அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. மேலும் பூக்குண்டம் இறங்கும் நிகழ்வு, பல்வேறு கோவில்களில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு ஒருசில கோவில்களில் மட்டும் நடைபெற்றது.

கூழாங்கல் ஆறு

வால்பாறை பகுதியில் பூமாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு மாரியம்மன் கோவில்களில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. வால்பாறை போலீஸ் நிலையத்தில் அனைத்து மதத்தை சேர்ந்த போலீசார் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. 

இது தவிர வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இல்லை. கூழாங்கல் ஆற்று பகுதியில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் சுட்டெரிக்கும் வெயிலில் குளித்து மகிழ்ந்தனர். தண்ணீர் அதிகமாக இல்லாததால் ஆபத்தான இடத்தில் கூட சுற்றுலா பயணிகள் இறங்கி குளித்து சென்றனர்.


Next Story