மின்கம்பத்தில் சரக்கு வேன் மோதியதில் வாலிபர் பலி

மின்கம்பத்தில் சரக்கு வேன் மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் விக்கிரவாண்டி ஆவுடையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் மதன் குமார் (வயது 20). இவர் அதே பகுதியை சேர்ந்த வெற்றி (21), ஜெயகுமார் (23), ஈஸ்வரன் (25) ஆகியோருடன் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த கண்டிகை பகுதியில் தங்கியிருந்து வடக்குப்பட்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார்.
நேற்று வேலை முடிந்து வடக்குப்பட்டு வழியாக கண்டிகை நோக்கி சரக்கு வேனில் 4 பேரும் சென்று கொண்டிருந்தனர். வேனை வெற்றி ஓட்டிச்சென்றார். வடக்குப்பட்டு சாலையில் வேன் செல்லும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பத்தில் பயங்கரமாக மோதி ஏரிக்கரை பகுதியில் வேன் கவிழ்ந்தது.
இதில் இரண்டாக உடைந்து வேன் கவிழ்ந்ததில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் மதன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






