‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 24 Jan 2022 1:41 PM GMT (Updated: 24 Jan 2022 1:41 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மின்வாரியம் உடனடி நடவடிக்கை

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் சாலையில் மின் இணைப்பு பெட்டி திறந்தநிலையில் இருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் அந்த மின் இணைப்பு பெட்டியை பாதுகாப்பான முறையில் மூடியுள்ளனர்.

குப்பை அகற்றப்படுமா?

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகா கன்னிவாக்கம் கிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குப்பைத்தொட்டி நிரம்பி வழிக்கிறது. குப்பையை அகற்றுவதற்கு ஒரு வாரமாக யாரும் வரவில்லை. இதனால் இந்த இடம் அசுத்தமாகவும், சுகாதார சீர்கேடாகவும் உள்ளது.

- அடுக்குமாடி குடியிருப்போர்.



கழிவுநீர் பிரச்சினை

சென்னை முகப்பேர் கிழக்கு கோல்டன் ஜார்ஜ் நகர் ரகுமான் தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் தொட்டி நிறைந்து உள்ளது. அதில் இருந்து கழிவுநீர் வெளியேறி தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இப்பகுதி சுகாதார சீர்கேடாக உள்ளது.

-ரகுமான் தெரு குடியிருப்புவாசிகள்.



சுகாதார சீர்கேடு

காஞ்சீபுரம் மாவட்டம் நன்மங்கலம் முதல் நிலை ஊராட்சி மன்ற அலுவலகம் செல்லும் அஸ்தினாபுரம் சாலை குப்பைக்கூளம் போன்று உள்ளது. கால்நடைகள் குப்பைகளை தூர்வாருவதால் இப்பகுதி அலங்கோலமாகவும், சுகாதார சீர்கேடாகவும் காட்சி அளிக்கிறது. இப்பகுதியை சுகாதாரமாக மீட்டெடுக்க நடடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள்.



பள்ளத்தை மூட வேண்டும்

தாம்பரம் சானடோரியம் பஸ் நிறுத்தத்தில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் மாநகர பஸ்கள் ஏறி, இறங்கும்போது பயணிகள் தள்ளாடும் நிலை உள்ளது. எனவே இந்த பள்ளத்தை சீரமைத்து தர வேண்டும்.

-வி.ஜி.வரதராஜன், வாலாஜாபாத்.

மின்கம்பம் மோசம்

சென்னை ஆதம்பாக்கம் ஈ.பி.காலனி 5-வது தெரு அய்யப்பன் கோவில் அருகே உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள்.



கொசுக்கள் தொல்லை

சென்னை நங்கநல்லூர் பாலாஜி நகர் 6-வது தெரு மற்றும் பெருமாள் கோவில் தெரு சந்திப்பு பகுதியில் கழிவுநீர் கால்வாய் திறந்தநிலையில் உள்ளது. இதனால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. கொசுக்கள் தொல்லையால் இரவில் நிம்மதியாக தூங்க முடியாத நிலை உள்ளது.

-வெங்கடேஷ், நங்கநல்லூர்.

ஆபத்தாக செல்லும் வயர்கள்

சின்ன காஞ்சீபுரம் வேகநதி ரோட்டில் உள்ள வீட்டின் மொட்டை மாடிகளையொட்டி தாழ்வான நிலையில் மின்சார வயர்கள் செல்கின்றன. இதனால் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்துவிடுமோ? என்ற அச்சம் உள்ளது. எனவே மின்சார வயர்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பொதுமக்கள்.

போக்குவரத்துக்கு இடையூறு

சென்னை எண்ணூர் உலகநாதபுரம் 6-வது தெருவில் உள்ள பாதாள சாக்கடை பாதை சேதம் அடைந்துள்ளது. இதில் யாரும் தவறி விழுந்து விடக் கூடாது என்பதற்காக தற்காலிக நடவடிக்கையாக இரும்பு தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை குறுகி போய் போக்குவரத்துக்கு தடங்கலாக அமைகிறது. எனவே இப்புகாரில் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

-சுந்தரம், எண்ணூர்.



பாதாள சாக்கடை அடைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட 38-வது வார்டு கக்கிளஞ்சாவடி 18-வது குறுக்கு தெருவில் கடந்த 3 மாதங்களாக பாதாள சாக்கடை அடைப்பு பிரச்சினை உள்ளது. இதனால் தெருவில் கழிவுநீர் வழிந்தோடுவதால் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி உள்ளோம். ஊரப்பாக்கம் வானொலி மன்றம் தெருவிலும் கழிவுநீர் பிரச்சினை தொடர்கதையாக இருக்கிறது.

-பொதுமக்கள்.

கூடுதல் பஸ்கள் வேண்டும்

சென்னை திருவொற்றியூர் சுங்கச்சாவடியில் இருந்து புதுவண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, கண்ணாதாசன் நகர், கொடுங்கையூர் ஆகிய பகுதிகள் வழியாக மூலக்கடைக்கு எஸ்.169 என்ற வழித்தட மாநகர பஸ் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்கினால் சாமானிய மக்களுக்கு உதவியாக இருக்கும்.

-பிரபு, வண்ணாரப்பேட்டை.

எரியாத மின்விளக்கு கோபுரம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ‘ஐ வல் ஆவடி’சதுக்கம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட உயர் மின்விளக்கு கோபுரம் எரியாமல் உள்ளது. எனவே ஆவடி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--தரணிதரன், ஆவடி.

காட்சி பொருளான ‘இ-டாய்லெட்’

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டில் மயான பூமியில் ‘இ-டாய்லெட்’ அமைந்துள்ளதால், இதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பயன்பாடு இன்றி இருக்கும் இந்த கழிப்பிடத்தை அகற்றிவிட்டு புதிய இடத்தில் அமைத்து தர வேண்டும்.

-அயனம்பாக்கம் பொதுமக்கள்.



முடிக்கப்படாத சாலை பணிகள்

முகலிவாக்கம் சுபசிரி நகர் 6-வது விரிவாக்கம் சாலை பணிகள் 3 மாதங்களாக எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. இதனால் மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும்.

-பொதுமக்கள், முகலிவாக்கம்.

குண்டும், குழியுமான சாலை

தாம்பரம் மாநகராட்சி ஜமீன் பல்லாவரம் தர்கா சாலையில் உள்ள வங்கி சந்திப்பு முதல் கச்சேரி மலை வரை உள்ள சாலை குண்டும் குழியுமாக சீர்கெட்டு உள்ளது. இந்த சாலையில் முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் நடப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு இடையே வாகனங்களில் செல்லும் நிலைமை உள்ளது.

-ஏ.பி.மதிவாணன், ஜமீன் பல்லாவரம்.





Next Story