‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 25 Jan 2022 2:12 PM GMT (Updated: 25 Jan 2022 2:12 PM GMT)

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

போக்குவரத்து கழகத்தின் பொறுப்பான நடவடிக்கை

திருவொற்றியூர்-அண்ணாசாலை வழித்தட மாநகர பஸ் ராயபுரம் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பயணிகள் கோரிக்கை சுட்டிக்காட்டப்பட்டது. தற்போது அந்த வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் ராயபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்கின்றன. நடவடிக்கை எடுத்த மாநகர போக்குவரத்து கழகத்துக்கும், உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும் பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

வாகன ஓட்டிகள் அவதி

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டு 3 மாதங்கள் ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமம் அடைகிறார்கள். போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனினும் இந்த பள்ளம் சீரமைக்கப்படாமல் உள்ளது. வாகன ஓட்டிகளின் இன்னல்களை உணர்ந்து நெடுஞ்சாலைத்துறை இந்த பள்ளத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சமூக ஆர்வலர் காயல் மஜீத். 

வீணாகும் குடிநீர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் ஏ.என். குப்பம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் உள்ள பைப் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. கோடை காலத்தில் தண்ணீருக்காக தவிக்கும் நிலைமையை உணர்ந்து, இந்த பைப் குழாயை சரி செய்து தண்ணீர் வீணாகுவதை தடுக்க வேண்டும்.

-கிராம மக்கள்.




நிழற்குடைகள் அமைக்கப்படுமா?

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் 15-க்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளது. ஆனால் ஒரு நிறுத்தத்தில் கூட நிழற்குடைகள் இல்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் அவதியுறும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு செய்து பயணிகளுக்கு வசதியாக நிழற்குடைகள் அமைத்து தர வேண்டும்.

-ஆப்பூர் ஹரி.

சாலையை சீரமைக்க வேண்டும்

மடிப்பாக்கம் உள்ளகரம் 168-வது வார்டு எம்.ஜி.ஆர். 2-வது குறுக்கு தெருவில் கழிவுநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பள்ளத்தை முறையாக மூடப்படவில்லை. இதனால் இப்பகுதி மேடாக இருக்கிறது. இதனால் சாலையின் அழகு சீர்கெட்டு உள்ளது. போக்குவரத்துக்கும், நடந்து செல்வதற்கும் இடையூறாக இருக்கிறது. எனவே இதனை சீரமைக்க வேண்டும்.

-பாலாஜி, மடிப்பாக்கம்.



மின்கம்பம் மாற்றப்படுமா?

செங்கல்பட்டு மாவட்டம் வேங்கைவாசல் 3-வது வார்டு சந்தோஷ்புரம் மா.பொ.சிவஞான தெருவில் உள்ள மின்கம்பம் போக்குவரத்துக்கு இடையூறாக நடுப்பகுதியில் இருக்கிறது. எனவே இந்த மின்கம்பத்தை தெரு ஓரமாக மாற்றி வைக்க வேண்டும்.

சம்பத், வேங்கைவாசல்.

மழைநீர் கால்வாயும்.., மின்சார கேபிளும்..,

சென்னை எம்.ஜி.ஆர். நகர் கே.கே.சாலை அன்னை சத்யா தெரு சந்திக்கும் இடத்தில் மின் இணைப்பு பெட்டி உள்ளது. இந்த மின் இணைப்பு பெட்டிக்கு செல்லும் வயர்கள் மழைநீர் கால்வாய் மூடியின் மேல் செல்கிறது. இதனால் இந்த கால்வாயை தூருவாருவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இப்பிரச்சினைக்கு மின்வாரியமும், குடிநீர்வாரியமும் இணைந்து தீர்வு காண வேண்டும்.

-பொதுமக்கள். 



பூங்காவா? எருமை மாடுகள் கூடாரமா?

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் விசுவேசபுரத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கும், முதியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காகவும் பூங்கா அமைக்கப்பட்டது. தற்போது இந்த பூங்கா எருமை மாடுகள், பன்றிகள் குடியிருக்கும் கூடாரம் போன்று உள்ளது. 

-பொதுமக்கள்.



கழிவுநீர் பிரச்சினை

சென்னை தண்டையார்பேட்டை ஜம்புலி வில்லேஜ் ரவி கார்டன் முதல் தெருவில் கழிவுநீர் பிரச்சினை தொடர் கதையாக இருக்கிறது. இதனால் இப்பகுதி சுகாதார சீர்கேடாக காட்சி அளிக்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகுகின்றன. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எ

-ரவி கார்டன் குடியிருப்போர் நலச்சங்கம்.



இரவு 9 மணிக்கு கடைசி பஸ் இயக்க வேண்டும்

செங்குன்றம்-திருவள்ளூர் இடையே 505 வழித்தட மாநகர பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் தொழிலாளர்கள் அதிகம் பயணம் செய்கிறார்கள். ஆனால் இரவு 8 மணிக்கு மேல் இந்த பஸ் சேவை இல்லை. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் பணி முடிந்து வருவோர்கள் செங்குன்றத்தில் இருந்து திருவள்ளூருக்கு செல்ல பஸ்கள் மாறி, மாறி செல்லும் நிலை உள்ளது. எனவே இரவு 9 மணிக்கு கடைசி பஸ் இயக்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

-பா.தேவேந்திரன், தாமரைப்பாக்கம்.

பள்ளத்தை சீரமைக்க வேண்டும்

சென்னை விருகம்பாக்கம் வாய்ப்புத்திரா தெருவில் கழிவுநீர் கால்வாய் பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் யாரும் தவறி விழுந்து விடக் கூடாது என்பதற்காக தற்காலிக தீர்வாக மரக்குச்சியை நட்டு வைத்துள்ளோம். இப்பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள்.



நாய்கள் தொல்லை

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாலுகா திருமழிசை, மீஞ்சூர் அரியன் நகர் ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மிகுந்த அச்சத்துடன் சாலையில் செல்லும் நிலைமை இருக்கிறது.

- பொதுமக்கள். 


Next Story