சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் பஞ்ச கருட சேவை உற்சவம்


சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் பஞ்ச கருட சேவை உற்சவம்
x
தினத்தந்தி 25 Jan 2022 8:35 PM GMT (Updated: 25 Jan 2022 8:35 PM GMT)

சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் பஞ்ச கருட சேவை உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சேலம்:-
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் பஞ்ச கருட சேவை உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்ச கருட சேவை
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் பஞ்ச கருட சேவை உற்சவம் விமரிசையாக நடத்தப்படும். அன்றைய தினம் அம்மாபேட்டை பாவநாராயணசாமி கோவில் உற்சவர், செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உற்சவர், சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் உற்சவர், 2-வது அக்ரஹாரம் லட்சுமி நாராயணசாமி கோவில் உற்சவர், கோட்டை பெருமாள் கோவில் உற்சவர் ஆகிய கோவில்களின் உற்சவர்கள் சந்திக்கும் பஞ்ச கருட சேவை நிகழ்ச்சி கோட்டை மைதானத்தில் நடைபெறும்.
இந்தாண்டு கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக அங்கு நடக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதற்கு பதிலாக அந்தந்த கோவில்களிலேயே பஞ்ச கருட சேவை உற்சவம் நேற்று நடந்தது.
சாமி தரிசனம்
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் காலையில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7 மணிக்கு பெருமாள், ஆண்டாள், சீர்வரிசைகளுடன் உள்புறப்பாடு நடந்தது. பின்னர் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி, தீபாராதனை சாற்றுமுறை உள்ளிட்டவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு சாமிக்கு திருக்கல்யாண சிறப்பு அலங்காரம், உள்புறப்பாடு மற்றும் 11.30 மணிக்கு திருக்கல்யாண மஹோத்சவம் ஆகியன நடக்கிறது.

Next Story