கடலூர் அருகே தூக்கில் வாலிபர் பிணம்


கடலூர் அருகே தூக்கில் வாலிபர் பிணம்
x
தினத்தந்தி 26 Jan 2022 5:26 PM GMT (Updated: 26 Jan 2022 5:26 PM GMT)

கடலூர் அருகே தூக்கில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார் அளித்துள்ளார்.

நெல்லிக்குப்பம், 

கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு அருகே சிலம்பிநாதன்பேட்டை பகுதி முந்திரி தோப்பில் உள்ள ஒரு மரத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று பிணமாக தொங்கினார். இது குறித்த தகவல் அறிந்த நடுவீரப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். 

அதில் இறந்தவர், கடலூர் வழிசோதனைபாளையத்தை சேர்ந்த புகழேந்தி (வயது 31) என்பது தெரியவந்தது. இதையடுத்து புகழேந்தியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

சாவில் சந்தேகம்

இது குறித்து புகழேந்தி மனைவி சுரோஷினி நடுவீரப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதில், நானும் எனது கணவரும் வெளிநாட்டில் இருந்து கடந்த 13-ந்தேதி சொந்த ஊருக்கு வந்தோம். பின்னர் சில நாட்களுக்கு முன்பு என்னை எனது கணவர், தாய் வீட்டில் விட்டுவிட்டு சென்றார். இந்த நிலையில் எனது கணவர் தூக்கில் மர்மமான முறையில் பிணமாக கிடந்துள்ளார். எனது கணவரின் சாவில் சந்தேகம் உள்ளது. 

எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகழேந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து விட்டு தூக்கில் தொங்க விட்டு சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story