ஜெகதாப்பட்டினம் அருகே வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகைகள் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

ஜெகதாப்பட்டினம் அருகே வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோட்டைப்பட்டினம்:
14 பவுன் நகைகள் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் அருகே ஏம்பவயல் கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி மீனா (வயது 30). நீலகண்டன் வெளியூருக்கு சென்று உள்ளார். மீனா மட்டும் தனது குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வருகிறார். தினந்தோறும் இரவு நேரத்தில் மீனா அருகே உள்ள தனது அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் தூங்குவதற்காக சென்று விடுவார். பின்னர் காலையில் வீட்டுக்கு வருவது வழக்கம். அதேபோல் நேற்றுமுன்தினம் தனது அம்மா வீட்டிற்கு மீனா குழந்தைகளுடன் தூங்க சென்று விட்டு காலையில் அவரது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டு பீரோவில் இருந்த 14 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து மீனா ஜெகதாப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 14 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story