காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
குடியரசு தினவிழா
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில் குடியாசு தினவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய 25 போலீஸ் துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சரின் காவலர் பதக்கங்களை வழங்கினார்.
மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, போக்குவரத்து துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை, மற்றும் பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 228 அரசு அலுவலர்களுக்கும், 25 ஆண்டுகள் பணி முடித்தமைக்கான 5 நபர்களுக்கும் நற்சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கி சிறப்பித்தார்.
காந்தியடிகள் உருவச்சிலைக்கு
நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சத்யபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி கணேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், மாவட்ட தொழில் மைய மேலாளர் சேகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து இந்திய நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றி பாராட்டி, பெருமைப்படுத்துகின்ற வகையில், காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள காந்தியடிகள் உருவச்சிலைக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகிகளின் வயது மூப்பை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகளின் வீடுகளுக்கு சென்று தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் மூலம் அவர்களுக்கு கதர் ஆடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Related Tags :
Next Story






