கள்ளக்காதலில் பிறந்த பச்சிளங் குழந்தையின் உடலில் கல்லைக்கட்டி பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்த கொடூர சம்பவம்


கள்ளக்காதலில் பிறந்த பச்சிளங் குழந்தையின் உடலில் கல்லைக்கட்டி பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்த கொடூர சம்பவம்
x
தினத்தந்தி 27 Jan 2022 4:56 PM GMT (Updated: 27 Jan 2022 4:56 PM GMT)

கள்ளக்காதலில் பிறந்த பச்சிளங் குழந்தையின் உடலில் கல்லைக்கட்டி பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்த கொடூர சம்பவம்

தாராபுரம்,:
தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கள்ளக்காதலில் பிறந்த பச்சிளங் குழந்தையின் உடலில் கல்லைக்கட்டி பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பிரசவத்திற்கு சேர்ந்தார்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 24-ந்தேதி இரவு நிறைமாத கர்ப்பிணி ஒருவரை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழைத்து வந்து பிரசவத்திற்கு சேர்த்தார். அவர்கள் திண்டுக்கல் மாவட்டம்ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்றும், அவரது மனைவி சவுந்தரமணி (வயது 40) என்றும் முகவரியை ஆஸ்பத்திரியில் தந்தனர்.
இதையடுத்து செவிலியர்கள் அந்த பெண்ணை ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதித்து சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. மறுநாள் அதிகாலை அந்த பெண்ணையும், குழந்தையையும் காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த செவிலியர்கள் பல்வேறு பகுதிகளில் தேடிப்பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை. ஆஸ்பத்திரி தலைமை மருத்துவரிடம் இது பற்றி தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
அதன்பேரில் தலைமை மருத்துவர் சிவபாலன் உடனடியாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு வந்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் யார்? எதற்காக திண்டுக்கல்லில் இருந்து தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து குழந்தையை பெற்றுக்கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
போலி முகவரி
இந்த நிலையில் அவர்கள் கொடுத்த முகவரிக்கு சென்ற போது அது போலியான முகவரி என்பது தெரியவந்தது. மேலும் அந்த முகவரியுடன் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை அழைத்தபோது போனை எடுத்தவர்திடீரென இணைப்பை  துண்டித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த தாராபுரம் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான பெண்ணின் புகைப்படத்தை வைத்து அந்தப்பெண் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்தப் பெண் திண்டுக்கல் மாவட்டம் அப்பலூத்து பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி சகுந்தலாமணி (40) என்பதும், சுப்பிரமணி சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு 17 வயதில் ஒரு மகன் உள்ளார். இதையடுத்து போலீசார் சகுந்தலாமணியை தேடிப்பிடித்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. 
கள்ளக்காதல்
அவருக்கு பிறந்த குழந்தை கள்ளக்காதலில் பிறந்தது என்றும், இதனால் அவர் அந்த குழந்தையை கிணற்றில் கல்லைக்கட்டி வீசி கொலை செய்ததும் தெரிய வந்தது. சகுந்தலாமணிக்கும், பக்கத்து தோட்டத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவரான ரத்தினசபாபதி (40) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதில் அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சகுந்தலாமணியை தனது உறவுக்கார பெண் என்று கூறி ஆஸ்பத்திரியில் ரத்தினசபாபதி பிரசவத்துக்காக சேர்த்துள்ளார்.
கிணற்றில் வீசி கொலை
ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்த பிறகு யாருக்கும் தெரியாமல் குழந்தையுடன் தப்பிச் சென்றுள்ளார். கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்பதால் உறவினர்கள் கேவலமாக பேசுவார்களே, தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்களே என்று நினைத்த சகுந்தலாமணி குழந்தையை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து தாராபுரத்தை அடுத்துள்ள காட்டம்பட்டி பகுதிக்கு சென்று குழந்தையின் உடலை கல்லைக்கட்டி கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அந்த கிணற்றுக்கு சென்று பார்த்தபோது குழந்தையின் உடல் மிதந்து கொண்டிருந்தது. அதனை மீட்டு பிரேதபரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெண் கைது
பின்னர் சகுந்தலாமணி மற்றும் அவரது கள்ளக்காதலன் ரத்தினசபாபதி ஆகிய இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து சகுந்தலாமணியை கைது செய்தார். ரத்தினசபாபதியை வலைவீசி தேடி வருகின்றனர். ரத்தினசபாபதிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பச்சிளங்குழந்தையை பெற்ற தாயே கல்லைக்கட்டி கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story