அரசு நிலத்தில் கல் குவாரி அமைப்பதற்காக கிராம மக்களிடம் கருத்து கேட்பு

அரசு நிலத்தில் கல் குவாரி அமைப்பதற்காக கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடந்தது.
கருத்து கேட்பு கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட மதூர், பட்டா, பழவேரி, அருங்குன்றம், பினாயூர், குண்ணவாக்கம், பேரனாக்காவூர், சிறுமயிலூர், சித்தாலப்பாக்கம், உள்ளிட்ட கிராமங்களில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறுதாமூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக 4 கல்குவாரிகள் அமைய உள்ளது. சிறுதாமூர் கிராமத்தில் அமைய உள்ள கல்குவாரிகள் குறித்து தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கிராம மக்களிடையே கருத்து கேட்பு கூட்டம் வாலாஜாபாத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள் தங்கள் பகுதியில் அமைக்கப்படும் கல்குவாரிகள் செயல்பாடுகள் மூலம் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு தங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாகவும், காற்று, குடிநீர் உள்ளிட்டவைகளை மாசு ஏற்படுத்தி வருவதாகவும், அதிக பாரம் ஏற்றிச்செல்வதால் சாலை கள் முழுவதும் சேதம் அடைந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர்.
கோரிக்கை
மேலும் சாலைகள் சேதமடைந்து உள்ளதால் தங்கள் பகுதிகளுக்கு பஸ் வசதிகளும் இல்லாமல் உள்ளது என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் கருத்துக் கேட்பு கூட்டத்தை சம்பந்தப்பட்ட கிராமங்களிலேயே நடத்திட வேண்டும் என்றும், கல் குவாரிகளில் செயல்பாடுகளை அடிக்கடி கண்காணித்து கிராமப்புற மக்கள் பாதிக்காத வகையில் கல்குவாரிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம் கோரிக்கை விடுத்தனர்.
கருத்துக்கேட்பு கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் விஸ்வநாதன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை காஞ்சீிபுரம் மாவட்ட இணை இயக்குனர் லட்சுமி ப்ரியா, காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. ராஜலட்சுமி, உத்திரமேரூர் தாசில்தார் காமாட்சி, மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களும், கல்குவாரி உரிமையாளர்களும், கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






