பண்ணாரி சோதனைச்சாவடி அருகில் குட்டிகளுடன் ரோட்டில் சுற்றித்திரிந்த யானைகள்- போக்குவரத்து பாதிப்பு


பண்ணாரி சோதனைச்சாவடி அருகில் குட்டிகளுடன் ரோட்டில் சுற்றித்திரிந்த யானைகள்- போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 28 Jan 2022 10:11 PM GMT (Updated: 28 Jan 2022 10:11 PM GMT)

பண்ணாரி சோதனைச்சாவடி அருகில் குட்டிகளுடன் ரோட்டில் சுற்றித்திரிந்த யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலம்
பண்ணாரி சோதனைச்சாவடி அருகில் குட்டிகளுடன் ரோட்டில் சுற்றித்திரிந்த யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 12 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு மான், யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி, கரடி உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் இருந்து யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி பண்ணாரி சோதனைச்சாவடி பகுதிக்கு வந்து விடுகின்றன.
அதேபோல் நேற்று முன்தினம் இரவு  வனப்பகுதியில் இருந்து யானைகள் குட்டிகளுடன் வெளியேறின. பின்னர் பண்ணாரி சோதனைச்சாவடி அருகில் உள்ள ரோட்டுக்கு வந்தன. ரோட்டில் யானைகள் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தன.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் சற்று தூரத்திலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். இதன் காரணமாக கார், பஸ், லாரி, வேன், இருசக்கர வாகனங்கள் என எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.
ஒரு சிலர் தங்கள் வாகனங்களில் இருந்தபடியே யானைகளை செல்போனில் புகைப்படம் எடுத்தனர். சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு யானைகள் ரோட்டை கடந்து சென்றன. அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீராகியது. வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு் சென்றன. யானைகளால்  சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story