விழுப்புரம் மாவட்டத்தில் பணம், பொருட்களை எடுத்துச்செல்வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விதிமுறையை மீறி பணம், பொருட்களை எடுத்துச்செல்வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி நடக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் 22-ந் தேதி எண்ணப்படுகிறது.
இதற்கான தேர்தல் தேதியை கடந்த 26-ந் தேதியன்று மாலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணமோ அல்லது பரிசுப்பொருட்களோ கொடுத்து வாக்குகளை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்காக அவற்றை வாகனங்களில் எடுத்துச்செல்வார்கள்.
பறக்கும் படை குழுக்கள்
இதனை கண்காணித்து தடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளிலும் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்களில் ஒரு அரசு அலுவலர், ஒரு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் என 4 பேர் பணியில் இருப்பார்கள். இந்த குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் இருந்து மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தீவிர வாகன சோதனை
அதன்படி இந்த பறக்கும் படை குழுவினர் நேற்று முதல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இக்குழுவினர் இருசக்கர வாகனம், கார், ஆட்டோ, வேன், லாரி, சரக்கு வாகனம், மினி லாரி, தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள் என அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிரமாக சோதனை செய்த பிறகே செல்ல அனுமதித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story