கொரோனா தொற்றின் 3-வது அலையில் காய்ச்சல், சளி, தலைவலியை விட உடல்வலியே அதிகம்


கொரோனா தொற்றின் 3-வது அலையில் காய்ச்சல், சளி, தலைவலியை விட உடல்வலியே அதிகம்
x
தினத்தந்தி 30 Jan 2022 5:17 PM GMT (Updated: 30 Jan 2022 5:17 PM GMT)

தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் 3-வது அலையில் காய்ச்சல், சளி, தலைவலியை விட உடல்வலியே அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம்
தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் 3-வது அலையில் காய்ச்சல், சளி, தலைவலியை விட உடல்வலியே அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
3-வது அலை
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலை வேகமாக பரவி வருகிறது.தொற்றின் தீவிர பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கையின் பயனாக தொற்று பரவல் எண் ணிக்கை குறைந்து வருகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் பாதிப்பில் இருந்து மக்கள் படிப்படியாக மீண்டு வருகின்றனர். கொரோனா தொற்று பரவத்தொடங்கிய முதல் அலையின் போது காய்ச்சல், தொண்டை வலி, சளி, இருமல், உடல்வலி என பாதிப்பு ஏற்பட்டு இறுதியில் மூச்சுதிணறல் வரை சென்று உயிரிழப்பில் முடிந்தது. 
பெரும் அச்சத்தை ஏற்படுத்திய இந்த கொரோனா தொற்று முதல்அலையினை முடித்து கொண்டு 2-வது அலை பரவிய போது மூச்சுதிணறல் தவிர மற்ற அனைத்து தொல்லைகளும் மக்களை பாடாய்படுத்தியது. 
இயல்பு வாழ்க்கை
இதில் இருந்து ஒருவழியாக தப்பித்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில் அடுத்தகட்டமாக கொரோனா தொற்று உருமாறி 3-வதுஅலையாக பரவத்தொடங்கி உள்ளது. இந்த 3-வது அலையில் பாதுகாப்பாக இருந்தவர்களையும் விட்டு வைக்காமல் தொற்று தொற்றிக்கொண்டது. எங்கு பார்த் தாலும் யாரைப்பார்த்தாலும் காய்ச்சல், சளி, இருமல், உடல்வலி என்று கூறிக்கொண்டு தவிக்கும் நிலையை பார்க்க முடிந்தது.
இந்த தொந்தரவுகள் ஓரிருநாளில் ஒவ்வொன்றாக படிப் படியாக குறைந்து வந்தாலும் எவரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் இன்றுவரை பாடாய்படுத்தி வருவது உடல் வலிதான். யாரைக்கேட்டாலும் உடல்நிலை சரியாகி விட்டது ஆனால், உடல்வலிதான் இன்னும் விடவில்லை தாங்க முடியவில்லை என்று  கூறி வருகின்றனர். 
இதுகுறித்து சுகாதாரத்துறையினரிடம் கேட்டபோது, 3-வதுஅலையில் கொரோனா தொற்று அனைவரையும் தொற்றிக்கொண்டு தனது பாதிப்பு அறிகுறிகளை காட்டியது. இருப்பினும் அனைவருக்கும் உடல்வலி என்பது தீராததாகவே இன்றளவும் உள்ளது.
சிக்கல் 
இந்த உருமாறிய கொரோனா தொற்று அனைவருக்கும் தாங்க முடியாத உடல்வலியை தந்துள்ளது. இடுப்புக்கு கீழ் உடல்வலிமையே இல்லாததுபோன்று பயங்கர வலியாக உள்ளது. எந்த மருந்து மாத்திரைக்கும் தீராத வகையில் நிற்கவோ, நடக்கவோ, உட்காரவோ முடியாத வகையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதவிர, பலருக்கு சர்க்கரை அளவும், கொலஸ்ட்ரால் அளவும் திடீரென்று உயர்ந்து குறைவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு தொற்றின் பாதிப்பை தவிர வேறு என்ன காரணம் என்று தெரிய வில்லை. எனவே, மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு வெளியில் தேவையின்றி வராமல் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்வதுதான் ஒரே வழி. இவ்வாறு அவர்கூறினர்.

Next Story