ரூ.14 லட்சம் மதுபானம் தரையில் ஊற்றி அழிப்பு


ரூ.14 லட்சம் மதுபானம் தரையில் ஊற்றி அழிப்பு
x
ரூ.14 லட்சம் மதுபானம் தரையில் ஊற்றி அழிப்பு
தினத்தந்தி 31 Jan 2022 3:59 PM GMT (Updated: 31 Jan 2022 3:59 PM GMT)

வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களை போலீசார் தரையில் ஊற்றி அழித்தனர்

பொள்ளாச்சி

வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களை போலீசார் தரையில் ஊற்றி அழித்தனர்.

மதுபாட்டில்கள் பறிமுதல்

கோவை மாவட்டம் பேரூர் மதுவிலக்கு போலீஸ் நிலையம் பொள்ளாச்சியில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தையொட்டி கேரள மாநிலம் இருப்பதால், அங்கிருந்து மதுபாட்டில்களை அதிகமாக பொள்ளாச்சிக்கு கடத்தி வருகின்றனர். இதுதவிர டாஸ்மாக் மதுக்கடைகளில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி, சிலர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

இதை தடுக்க மதுவிலக்கு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை பாதுகாப்பாக மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிக்க கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் மதுபாட்டில்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஊற்றி அழிப்பு

பொள்ளாச்சியை அடுத்த ஆ.சங்கம்பாளையத்தில் உள்ள அரசு புறம்போக்கு குட்டை பகுதிக்கு மதுபாட்டில்களை போலீசார் சரக்கு வாகனத்தில் எடுத்து வந்தனர். பின்னர் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ், கோட்ட கலால் அலுவலர் விஜயகுமார், டாஸ்மாக் மண்டல மேலாளர் மகாராஜ் ஆகியோர் முன்னிலையில் மதுபாட்டில்களின் மூடியை கழற்றி குட்டையில் மதுவை ஊற்றி அழித்தனர்.

இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் கூறுகையில், கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் 10 ஆயிரத்து 446 கடத்தல் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.14 லட்சம் இருக்கும். இந்த பாட்டில்கள் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் தரையில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும் பாட்டில்கள் பொக்லைன் எந்திரம் மூலம் உடைக்கப்பட்டன.

Next Story