எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்


எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 6 Feb 2022 6:37 PM GMT (Updated: 6 Feb 2022 6:37 PM GMT)

எமனேஸ்வரம் வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பரமக்குடி,

எமனேஸ்வரம் வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வரதராஜபெருமாள் கோவில்

பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட எமனேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற பெருந்தேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து யாக சாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
கோ பூஜை, கஜ பூஜை, மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தது.நேற்று காலை 6-ம் கால பூஜைகள், மகா பூர்ணாகுதி நடந்தது. இதை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க தலையில் சுமந்து வந்த புனித நீரை கோவில் கலசங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.

பக்தர்கள் தரிசனம்

 அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் சுவாமியை தரிசித்தனர்.இதில் பரமக்குடி உள்பட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக விழாவில் எமனேசுவரம் சவுராஷ்ட்ரா சபை தலைவர் சேஷய்யன், துணைத்தலைவர் கண்ணன், பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், பத்மாவதி சில்க்ஸ் உரிமையாளர் சித்து ஜெனார்த்தனன், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர்கள் கோதண்டராமன், அய்யான், நாகராஜன், ஜெய்சங்கர், சரவணன், கணேஷ் பாபு, ராமச்சந்திரன், அனந்தகிருஷ்ணன், ரவிச்சந்திரன் உள்பட சபை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story